*கிலோ ரூ.200க்கு விற்பனை
ராயக்கோட்டை : ராயக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளான ஒடையாண்டஅள்ளி, நெல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் பரவலாக பேரீச்சை சாகுபடி செய்துள்ளனர். மானாவாரி நிலங்களை சீர்செய்து ஏக்கர் கணக்கில் பேரீச்சை தோப்புகளை விவசாயிகள் உருவாக்கியுள்ளனர்.
சொட்டு நீர் பாசனத்தில் மரங்கள் நன்கு வளர்ந்து, ஆண்டுக்கு ஒருமுறை மகசூல் கொடுத்து வருகிறது. அதன்படி, இந்த வருடமும் மரங்களில் குலை குலையாக பேரீச்சம் காய்களை விட்டு பழமாகி வருகின்றன. பேரீச்சம் பழத்தை கிலோ ரூ.200க்கு விற்பனை செய்கின்றனர்.
பழம் நல்ல ருசியாக இருப்பதால் தோட்டத்திற்கே சென்று வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், `ராயக்கோட்டை பகுதியில் பேரீச்சை சாகுபடி பரப்பினை அதிகரித்துள்ளனர்.
இங்குள்ள மண் வளத்திற்கேற்ப பேரீசை நன்கு வளர்ந்து திரட்சியான பழங்கள் கிடைக்கிறது. இந்த பழங்களை சந்தைக்கு அனுப்பி வைக்கும்போது, உடனுக்குடன் விற்பனையாகி விடுவதால் தோட்டத்திற்கே நேரடியாக சென்று கொள்முதல் செய்து வருகிறோம்,’ என்றனர்.
