×

நிதிஷ் பங்கேற்கும் கடைசி அமைச்சரவை கூட்டம் நாளை நடக்கிறது பீகாரில் புதிய அரசு அமைக்கும் பணி இன்று தொடங்கும்: ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் ஜா தகவல்

பாட்னா: பீகாரில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் வெற்றி பெற்றார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ளார். எனினும் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்யவில்லை.  மாநிலங்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன் பிறகு பாஜவை சேர்ந்த ஒருவர் முதல்வராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வந்துள்ளன. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் ஜா நேற்று சந்தித்து பேசினார்.

அதன் பிறகு சஞ்சய் ஜா கூறுகையில்,பீகாரில் புதிய அரசு அமைப்பதற்கான பணிகள் ஏப்.13ம் தேதி(இன்று) தொடங்கும் என்று நினைக்கிறேன். ஆனால் கூடுதல் விவரங்களுக்கு மாநில அரசில் உள்ளவர்களிடம் நீங்கள்(நிருபர்கள்) பேச வேண்டும் என்றார். நிதிஷ் ராஜினாமா செய்த பின் முதல்வராவார் என்று பரவலாக எதிர்பாக்கக்கூடிய பாஜவை சேர்ந்த துணை முதல்வர் சம்ராட் சவுத்ரியும் நிதிஷை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், பாஜவின் பரிந்துரையின் பேரில் தேஜ கூட்டணி எம்எல்ஏக்களால் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

புதிய அரசாங்கம் அமைப்பதில் பாஜவுக்கு முக்கிய பங்கு உண்டு என்றார். பீகார் அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. அதில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் கலந்து கொள்ளும் கடைசி அமைச்சரவை கூட்டம் இதுவாகதான் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த கூட்டம் முடிந்த பின் மாநில ஆளுநர் சையது அட்டா ஹஸ்னனை அவர் சந்தித்து ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பீகார் சட்ட பேரவையின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கு ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானை மத்திய பார்வையாளராக பாஜ கட்சி நியமித்துள்ளது.

Tags : Nitish ,Bihar ,JDU ,Sanjay Jha ,Patna ,Chief Minister ,Nitish Kumar ,Rajya Sabha elections ,Rajya Sabha ,
× RELATED அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 3ல் தொடக்கம்