×

5.73 கோடி வாக்காளர்களை சென்றடையும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பூத் சிலிப் விநியோகம் தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகப் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அடுத்த ஐந்து நாட்களில் நிறைவு பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடிகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ‘பூத் சிலிப்’ வழங்கப்படும். அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 5.73 கோடி வாக்காளர்களுக்கும் நேரடியாக வீடு தேடி சென்று ‘பூத் சிலிப்’ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளூராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சுமார் 1,200 வாக்காளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு மையத்திற்கும் தனிப்பட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, பூத் சிலிப் விநியோகம் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 75,000 முதல் 97,000 வரையிலான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் ஒரு ‘பூத் லெவல் அதிகாரி’ (பிஎல்ஓ)நியமிக்கப்பட்டு, அவர்கள் வீடு தோறும் சென்று வாக்காளர்களுக்கு நேரடியாக சிலிப்புகளை வழங்குகின்றனர். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றக்கூடிய வகையில் பிஎல்ஓக்களுக்கு முன்கூட்டியே பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ‘பூத் சிலிப்’ மூலம் வாக்காளர்கள் தங்களது பெயர் இடம்பெற்றுள்ள வாக்காளர் பட்டியல் விவரம், வரிசை எண், வாக்குச்சாவடி மையத்தின் இருப்பிடம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை எளிதாக அறிந்துகொள்ள முடியும். குறிப்பாக முதியோர் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இந்த ஆண்டு வழங்கப்படும் ‘பூத் சிலிப்’ படிவத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வரிசை எண் மற்றும் பகுதி எண் போன்ற விவரங்கள் தெளிவாக பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளதால், வாக்குச்சாவடி மையத்தை எளிதில் கண்டறிய வசதியாக இருக்கும். அதேபோல் க்யூஆர் குறியீடும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் வாக்குப்பதிவு நாளில் ஏற்படும் குழப்பங்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வாக்குப்பதிவுக்கு குறைந்தது 5 நாட்களுக்கு முன்பாகவே அனைத்து வாக்காளர்களுக்கும் ‘பூத் சிலிப்’ வழங்கி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிலிப்புகள் வழங்கப்படாத பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘பூத் சிலிப்’ கிடைக்காத நிலையில், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பிற அடையாள ஆவணங்களைக் கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்கலாம். எனவே, வாக்காளர்கள் எந்த வித அச்சமும் கொள்ள வேண்டாம். மேலும், பூத் சிலிப் வழங்கும் பணிகள் அடுத்த 5 நாட்களில் நிறைவு செய்யப்படும். தமிழகம் முழுவதும் சுமார் 5.73 கோடி வாக்காளர்களுக்கு இந்த சிலிப்புகள் வழங்கப்பட உள்ளன’ என்றனர்.

Tags : Chile ,Tamil Nadu ,Chennai ,Election Commission ,
× RELATED முத்து நகருக்கு முத்துவேல் கருணாநிதி...