சென்னை: சர்வதேச தேர்தல் பார்வையாளர் திட்டத்தின் மூலம் 38 சர்வதேச பிரதிநிதிகள் இந்தியாவில் நடைபெறும் தேர்தலை நேரில் பார்வையிட்டு, பாராட்டியதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக, 22 நாடுகளை சேர்ந்த 38 சர்வதேச பிரதிநிதிகள் இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளை நேரடியாக பார்வையிட்டனர்.
இந்த அனுபவத்தை “ஜனநாயகத்தின் உண்மையான திருவிழா” என்று விவரித்த பிரதிநிதிகள், சாதனை அளவிலான வாக்காளர் பங்களிப்பு, நுணுக்கமான திட்டமிடல் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தடையற்ற செயல்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்தனர். மக்களின் வாக்குச் செலுத்தும் ஆர்வம் எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது என்றனர். மேலும், சர்வதேச பிரதிநிதிகள் அசாம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு தங்களது இரண்டு நாள் பயணத்தை (ஏப்ரல் 8, 9ம் தேதி) தொடங்கினர்.
தேர்தலை ஒட்டுமொத்தமாக நடத்துவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்தந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள 100% இணையதள ஒளிபரப்பு கண்காணிப்பு அறைகளையும் அவர்கள் பார்வையிட்டு, அவற்றை ‘வெளிப்படைத்தன்மையின் வலுவான தூண்’ என்று வர்ணித்தனர். வாக்குப்பதிவு நாளன்று காலையில், பிரதிநிதிகள் மாதிரி வாக்குப்பதிவை பார்வையிட்டனர்.
அதன்பின்னர், இந்த 22 நாடுகளின் பிரதிநிதிகள் அசாம், கேரளா (கொச்சி மற்றும் திருவனந்தபுரம்) மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று நேரடி வாக்குப்பதிவு நடைமுறையை தனித்தனியாக பார்வையிட்டனர். வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டிருந்த சாய்வுதளங்கள், சக்கர நாற்காலிகள், தன்னார்வலர்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் உள்ளடக்கிய எளிதில் அணுகக்கூடிய வசதிகள் குறித்து அவர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
மேலும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படும் பிரத்யேக வாக்குச்சாவடிகளையும் அவர்கள் பாராட்டினர். தேர்தல் நிர்வாகத்தின் அளவு மற்றும் பிரமாண்டத்தை நேரில் காண வாய்ப்பளித்ததற்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கிய செயல்முறை மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்கான ஆணையத்தின் அர்ப்பணிப்பை பாராட்டினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
