×

எவ்வித புகார்களும் இல்லாத நிலையில் தலைமைச்செயலாளரை மாற்றுவதா? உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு திமுக பரபரப்பு கடிதம்

சென்னை: எவ்வித புகார்களும் இல்லாத நிலையில் தலைமை செயலாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை இயக்குநரை மாற்றியதை திரும்ப பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, அதன் நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த முருகானந்தத்திற்கு பதிலாக, சாய் குமாரை நியமித்துள்ளது.

இந்த தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பணிமாறுதலுக்கு, திமுக கடும் எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் இதற்கான எவ்வித காரணங்களும் குறிப்பிடப்படவில்லை; மேலும், முருகானந்தம் குறித்து எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் எவ்வித புகாரும் அளிக்கவில்லை. இடமாற்றம் செய்யப்படுவதற்கு எவ்விதமான தர்க்கரீதியான அல்லது நியாயமான காரணங்களும் இல்லை. அரசியல் கட்சி தலைமை தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இக்கால கட்டத்தில், அரசாங்கத்தின் அன்றாட செயல்பாடுகளை கண்காணித்து நெறிப்படுத்துபவர் தலைமை செயலாளரே ஆவார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய இந்த மாதத்தில், நிர்வாகம் சார்ந்த பல்வேறு வழக்கமான கோப்புகள், நீதிமன்ற வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கிய பணிகள் கையாளப்பட வேண்டியுள்ளன. முருகானந்தம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமைச் செயலாளராக பணியாற்றி வருவதால், தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் எவ்வித தடையுமின்றி சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு மிகவும் பொருத்தமானவர்.

இத்தகைய சூழலில், தங்கள் உத்தரவை உடனடியாக திரும்ப பெற்றுக்கொண்டு, முருகானந்தத்தை மீண்டும் பணியமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேபோல, சந்தீப் மிட்டலை காவல்துறை தலைமை இயக்குநராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதற்கு திமுக சார்பில் கடும் ஆட்சேபனையை தெரிவித்து கொள்கிறோம். உச்ச நீதிமன்றம் தனது பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளதை போலவே, அரசியலமைப்பின் 324வது பிரிவின்கீழ் உள்ள அதிகாரம் என்பது தேர்தல்களை நடத்துவது தொடர்பான பணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

தேர்தல் காலத்தில், தேர்தல் ஆணையமானது அரசுக்கு மாற்றாக செயல்படுவதில்லை. டிவிஏசி என்பது, அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். தேர்தல்களை நடத்துவதில் டிவிஏசி-க்கு எவ்வித பங்கும் இல்லை. எனவே, தேர்தல்களை நடத்துவது தொடர்பான பணிகளுடன் தொடர்பில்லாத அரசு பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பதே எங்களின் முதன்மையான ஆட்சேபனையாகும்.

சந்தீப் மிட்டல் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மையாகும். இது வெறும் யூகத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் ஐயம் அல்ல; மாறாக, சந்தீப் மிட்டல் தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், அவரே ஒப்புக்கொண்ட ஒரு உண்மையாகும். பாஜ தலைமையிலானதும், இத்தேர்தல் களத்தில் பிரதான எதிர்க்கட்சியாக போட்டியிடும் அதிமுகவை உள்ளடக்கியதுமான ‘தேசிய ஜனநாயக கூட்டணிக்கு’ ஆதரவாகவே அவர் செயல்படுவார் என்பதில், எங்கள் மனதிலும் தமிழ்நாட்டு மக்களின் மனதிலும் எவ்வித ஐயமும் இல்லை.

தனது சித்தாந்த சார்புகளை தவிர, மிட்டல் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. டாக்டர் மிட்டல் நிர்வாக பிரிவு டிஐஜியாக பணியாற்றிய ‘தேசிய குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல் நிறுவனத்தில்’ பணிபுரிந்த சங்கல்ப் ஆனந்த், 2014ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், தனது மனைவியுடன் இணைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

தனது தற்கொலை குறிப்பில், எஐசிஎப்எஸ்ல் நடைபெற்ற 250 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான ஊழலுக்கு மிட்டல், மற்றொரு அதிகாரியான கமலேந்திர பிரசாத் மற்றும் வேறு சிலரே காரணம் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். மிட்டல் மீது உத்தரபிரதேச அரசு முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்தது. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை காரணமாகவே, நீண்ட காலமாக மத்திய பணிக்கு அனுப்பப்பட்டிருந்தபோதிலும், ஒன்றிய அரசு அவரை கூடுதல் காவல்துறை தலைவர் பதவிக்கு தேர்வு செய்து அங்கீகரிக்கவில்லை;

அதேவேளையில், 1998ம் ஆண்டு பிரிவை சேர்ந்த பிற அதிகாரிகள் பதவி உயர்வு பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவரைவிட பணியில் மிகவும் இளையவர்களான (2007ம் ஆண்டு பிரிவை சேர்ந்த) அதிகாரிகளுக்குக்கூட ‘சிறந்த சேவைக்கான காவல்துறை பதக்கம்’ வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 13 ஆண்டுகளாக டாக்டர் மிட்டலுக்கு அப்பதக்கம் வழங்கப்படவில்லை.

டாக்டர் மிட்டல் பொதுவெளியில் வெளியிட்டுள்ள கருத்துக்கள், அவர் டிவிஏசி மற்றும் பாஜவின் தீவிர ஆதரவாளர் என்பதையும், முஸ்லிம்களுக்கும் இடதுசாரி சித்தாந்தத்திற்கும் எதிராக வெறுப்பு பேச்சுகளை பேசிய நீண்டகால பின்னணியை கொண்டவர் என்பதையும் எங்கள் மனதில் எவ்வித ஐயமுமின்றி உறுதிப்படுத்துகின்றன. அவர் மீது கடுமையான ஊழல் மற்றும் முறைகேடான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளன. இத்தகைய பின்னணியை கொண்ட ஒரு அதிகாரியை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைவராக நியமிப்பது, பொதுமக்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.

ஒரு நடுநிலையான மற்றும் பாரபட்சமற்ற அரசியலமைப்பு அமைப்பாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் எனும் நிறுவனம், பாஜவின் தேர்தல் முகவராக செயல்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தேர்தல் ஆணையம் அரசியலமைப்புக்கும் இந்நாட்டின் சட்டங்களுக்கும் மேலானது என்று, ஆணையத்தில் உள்ள எவருடைய மனதிலும் எவ்வித தவறான எண்ணமும் இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் தேர்தல் ஆணையம் எடுத்துவரும் நடவடிக்கைகளை இந்திய மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவை அசாமில் (அங்கு எந்தவொரு உயர் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்படவில்லை) தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் மாறாக இருக்கின்றன. சொல்லப்போனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதே, பாஜவை சேர்ந்த அசாம் முதல்வர் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அசாம் காவல்துறை ஒருதலைப்பட்சமான மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

எனவே, சந்தீப் மிட்டலை அப்பதவியிலிருந்து நீக்குமாறும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் இருவர் ஆகிய மூவரையும் கேட்டுக்கொள்கிறோம். இதற்கு நீங்கள் இணங்க தவறும்பட்சத்தில், சட்டத்திற்கு உட்பட்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

* சந்தீப் மிட்டல் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

* தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், அவரே ஒப்புக்கொண்ட உண்மை இது.

* தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகவே அவர் செயல்படுவார் என்பதில், எங்கள் மனதிலும் தமிழ்நாட்டு மக்களின் மனதிலும் எவ்வித ஐயமும் இல்லை.

Tags : DMK ,Election Commission ,Chennai ,T.R. Balu ,Anti-Corruption and Vigilance Department ,
× RELATED காரைக்கால் மீன் பிடித்துறைமுகத்தில்...