திருவனந்தபுரம்: கேரளத்தில் 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்து அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 78.27 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த தேர்தலை விட இம்முறை 3 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளது. இம்முறையும் வெற்றி பெற்று கேரளத்தில் பினராயி விஜயனின் 3.0 அரசு அமையும் என்று இடதுசாரி கூட்டணியினர் உறுதியாக நம்புகின்றனர்.
ஆனால் தங்களுக்கு 100 சீட்டுகளுக்கு மேல் கிடைக்கும் என்றும், ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என்றும் காங்கிரஸ் கூட்டணியினர் கூறுகின்றனர். இது ஒரு புறம் இருக்க, எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை தான் அமையும் என்றும், யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை பாஜ கூட்டணி தீர்மானிக்கும் என்றும் இக்கட்சியின் மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகிறார். இந்நிலையில் கேரளத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்து அனைத்துக் கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் பெரும்பாலான தொகுதிகளில் முந்தைய தேர்தல்களில் மிகவும் குறைவான வாக்குகளே பதிவானது என்பது குறிப்பிடத்தக்கதாகும். வாக்காளர்கள் திரண்டு வந்து இந்த தொகுதிகளில் வாக்களித்தது தங்களுக்கு பாதகமாகி விடுமோ என பல அரசியல் கட்சிகளும் கலக்கத்தில் உள்ளன. வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததற்கு ஆளுங்கட்சி மீதான எதிர்ப்புதான் காரணம் என்று காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் வாக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டது தங்களுக்கு சாதகமாகவே அமையும் என்று ஆளுங்கட்சியான இடதுசாரி கூட்டணி கூறுகிறது.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர்களின் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது இடதுசாரி கூட்டணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜி.சுதாகரன் அம்பலப்புழா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஆதரவுடன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் 80.75 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனிடம் உதவியாளராக இருந்த சுரேஷ்குமார் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட மலம்புழா தொகுதியில் 81.89 சதவீதம் வாக்குகளும்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவர் குஞ்சி கிருஷ்ணன் சுயேச்சையாக போட்டியிட்ட பையனூர் தொகுதியில் 80.57 சதவீதம் வாக்குகளும், இன்னொரு மூத்த மார்க்சிஸ்ட் தலைவரான கோவிந்தன் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட தளிப்பறம்பு தொகுதியில் 81.01 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதேபோல இம்முறை பெண்கள் வாக்கு சதவீதமும் கேரளத்தில் அதிகரித்துள்ளது. இங்கு ஆண்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகமாக உள்ளனர்.
கேரளத்தில் 1 கோடியே 32 லட்சத்து 20 ஆயிரத்து 811 ஆண் வாக்காளர்களும், 1 கோடியே 39 லட்சத்து 21 ஆயிரத்து 868 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்தம் 7,01,057 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இவர்களில் 81.19 சதவீதம் பெண்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இது கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலை விட 7.25 சதவீதமும், கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட 10 சதவீதமும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
