×

ராயக்கோட்டை வட்டாரத்தில் புளி உற்பத்தி பணியில் பெண் தொழிலாளர்கள் மும்முரம்

ராயக்கோட்டை : ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் சீசன் காரணமாக புளிய மரங்களில் இருந்து பழங்களை பறித்து, ஓடுகளை நீக்கி சுத்தப்படுத்தி விற்பனைக்கு அனுப்பும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை சீசன் காலங்களில் புளி உற்பத்தியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் புளியம் பழங்களை மரங்களில் இருந்து உலுக்கி பறித்து எடுத்து வந்து வெயிலில் காயவைத்து, தென்னை மட்டைகளை கொண்டு பதமாக தட்டி, ஓடுகளை நீக்கிய பின்பு, கொட்டைகளை அகற்றி விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம் மற்றும் வடமாநிலங்களுக்கும் புளி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ராயக்கோட்டை பகுதியில் உள்ள புளி வியாபாரிகள், பட்டை தட்டி நீக்கிய புளியை மொத்தமாக கொள்முதல் செய்து, கட்டுப்படியான விலை கிடைப்பதற்காக ஏ.சி. குடோன்களில் இருப்பு வைக்கின்றனர். பின்னர், தேவை அதிகரிக்கும்போது குடோன்களில் இருந்து புளியை எடுத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

100 நாள் வேலை மற்றும் வெளியூர்களில் உள்ள தொழிற்சாலைகள், நூற்பாலை வேலைக்கு பெண்கள் செல்வதால், தற்போது புளி சுத்தப்படுத்தும் பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.

இதனால், வேறு வழியின்றி கூடுதல் கூலி கொடுத்து, புளி சுத்தப்படுத்தும் பணியில் பெண்களை ஈடுபடுத்தி வருகின்றனர். தற்போது, சீசன் என்பதால் புளி சுத்தப்படுத்தும் பணி துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Rayakottai district ,Rayakottai ,Dharmapuri ,Krishnagiri ,
× RELATED வேலூரில் 85 வயது முதியவர்கள்,...