சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை மிகவும் கீழ்த்தரமாக பேசியிருக்கிறார். கொரோனா நேரத்தில் பழனிசாமியைப் போன்றவர்கள் வெளியே வருவதற்கே பயந்த நேரத்தில், முதல்வர் பொறுப்பு ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர்களும் மற்றவர்களும் தடுத்தபோதும் கூட மருத்துவமனைக்குள் சென்று கொரோனா நோயாளிகளை நேரில் பார்த்து, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதைப் பார்த்ததனுடைய விளைவு தான் தமிழ்நாட்டில் கொரோனா அச்சம் குறைந்து மக்கள் நிம்மதியாக வாழ தொடங்கினார்கள் என்பது வரலாறு.
இதை மூடி மறைக்க, வயிற்றெரிச்சலின் காரணமாக எடப்பாடி எவ்வளவு வாய்க்கொழுப்பு இருந்தால், திமிர் இருந்தால் \\”கொரோனாவிலே தளபதி போய் சேர்ந்திருப்பார்\\” என்று சொல்லுவார்?
எங்கள் தலைவரைப் பற்றி அவருக்கு தெரியாது. திமுக தலைவராக இன்றைக்கு இருக்கிற முதல்வர், தன் உயிரைத் துச்சமென மதித்து ஓடும் ரயிலின் முன் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த கலைஞருடைய மகன். அவர் உயிருக்கு பயந்தவர் அல்ல. அன்றைக்கு கொரோனா மருத்துவமனையில் போய் பார்த்துவிட்டு வந்த நேரத்தில் அவருடைய குடும்பத்தினரே, அவருடைய துணைவியாரே கதறி அழுதிருக்கிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினே ஒரு நேர்காணலில், \\”உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுங்கள்” என்று சொன்னபோது, மிகுந்த வேதனையோடு ஒன்றை நினைவுபடுத்தினார்.
‘‘எங்களுடைய தந்தை கோவை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளைப் பார்த்துவிட்டு வந்த நேரத்தில், அவருக்கு என்ன ஆகுமோ என்ற அச்சமும் பயமும் எங்களுக்கெல்லாம் ஏற்பட்டது. அது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி\\” என்று சொன்னார். திமுக மூத்த தலைவர்கள் அத்தனை பேரும் கலங்கினோம். அப்படிப்பட்ட தலைவரைப் பற்றி பழனிசாமி இந்த அளவுக்குக் கேவலமாகப் பேசுகிறார் என்றால் இது ஒன்றும் புதிதல்ல. காரணம் அவருக்கு கொலை, கொள்ளை இதெல்லாம் கைவந்த கலை.
ஏற்கனவே 1979லே மூன்று பேரை கொலை செய்த வழக்கில் கொலைக் குற்றவாளியாக இருந்து, அந்த வழக்கில் அவர் எப்படி வெளியே வந்தார் என்பது எல்லாம் எல்லோருக்கும் தெரியும். அந்தப் பகுதியில் இருக்கிற மக்களுக்கும் தெரியும். அன்றைக்கு அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்தால், இன்றைக்கு பழனிசாமி ஆயுள் கைதியாகத்தான் இருந்திருப்பார். அப்படிப்பட்ட பழனிசாமிக்கு ஒரு பழமொழி சொல்லுவார்கள், ‘‘நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அதனுடைய புத்தி போகாது” என்று. அதுபோல இவருடைய அந்த கொலைவெறி, அந்த உயிரைப் போக்குகிற மனப்பான்மை இன்னும் போகவில்லை என்பதை நேற்றைய தினம் அவருடைய பேச்சின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
பழனிசாமியால் சாத்தான்குளத்தில் மூடி மறைக்கப்பட்ட அந்த கொலை வழக்கில், தலைவர் தலையிட்டுப் போராடி சிபிஐ விசாரணை கொண்டு வந்ததால், அத்தனை பேருக்கும் மரண தண்டனை என்ற தீர்ப்பு வந்திருக்கிறது. அதிமுகவினர் திமுக பக்கம் வரத் தொடங்கியதை பார்த்த வயிற்றெரிச்சலின் உச்சமாகவே, முதல்வர் மு.க.ஸ்டாலினையும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் குறித்து பழனிசாமி கீழ்த்தரமாகப் பேசி வருகிறார். காமராஜர் மறைந்தபோது அவருக்கு செய்ய வேண்டிய அத்தனை மரியாதைகளையும் செய்தவர் கலைஞர். எமர்ஜென்சி காலத்தில் காமராஜரை கைது செய்ய மறுத்த காரணத்தினாலேயே திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
காமராஜர் மறைந்த போது எங்கே அடக்கம் செய்வது என்ற குழப்பம் இருந்தபோது, அவர் வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியாக வாழ்ந்ததால் காந்தி மண்டபம் அருகிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவர் கலைஞர்.
‘‘காமராஜருக்கு கொள்ளி வைக்க மகன் இல்லை என்ற குறையை கருணாநிதி தீர்த்து வைத்தார்” என்று அன்றைய காங்கிரஸ் தலைவர்களே மனதாரப் பாராட்டினர். ஜானகி அம்மாள் குறித்துப் பேச பழனிசாமிக்கு தகுதியே கிடையாது. எம்ஜிஆர்-ஜானகி திருமணத்தை நடத்தி வைத்ததே கலைஞர் தான். இவ்வாறு அவர் கூறினார்.
