×

பாராமதி இடைத்தேர்தல் சுனேத்ரா பவாருக்கு ஆதரவாக காங். வேட்பாளர் விலகல்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவராகவும் மகாராஷ்டிராவின் துணை முதல்வராகவும் இருந்த அஜித் பவார், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் மாநிலத்தின் புதிய துணை முதல்வராக பொறுப்பேற்றார். அஜித் பவாரின் மறைவை அடுத்து அவர் வெற்றி பெற்ற பாரமதி தொகுதிக்கு ஏப்ரல் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அந்த தொகுதியில் போட்டியிட சுனேத்ரா பவார் கடந்த 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஆகாஷ் மோரே உட்பட 53 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், போட்டியில் இருந்து விலக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், சரத் பவார், சுப்ரியா சுலே, மகாராஷ்டிர அமைச்சர் மகரந்த் பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் உடன் தொலைபேசியில் பேசிய சுனேத்ரா பவார், மகாராஷ்டிர அமைச்சர் மகரானந்த் பாட்டில் தலைமையிலான தூதுக்குழுவையும் அனுப்பிவைத்தார்.

இதையடுத்து, இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் ஆகாஷ் மோரே தனது வேட்புமனுவை திரும்பப் பெறுவார் என்று ஹர்ஷ்வர்தன் சப்கல் அறிவித்தார். அதேநேரத்தில், 2029 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நிச்சயம் நிறுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். வேட்புமனுவை திரும்பப் பெற இன்று கடைசி நாள் எனும் நிலையில், ஆகாஷ் மோரே தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளார். சுயேட்சை வேட்பாளர்கள் 22 பேர் களத்தில் உள்ளனர். இதனால் தேர்தல் நடந்தாலும் சுனேத்ரா பவார் எளிதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

Tags : Congress ,Sunetra Pawar ,Baramati ,Mumbai ,Nationalist Congress Party ,NCP ,Maharashtra ,Deputy Chief Minister ,Ajit Pawar ,
× RELATED மதுராவில் பெரும் சோகம்: யமுனை ஆற்றில்...