×

குடிபோதையில் வீட்டுக்கு வந்த மாணவன்; பெற்றோர் அதிர்ச்சி: பீகார் அரசு பள்ளி கழிவறையில் 204 லிட்டர் மது பறிமுதல்

பாட்னா: பீகாரில் 2016ம் ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராயம் கடத்தல் சட்டவிரோதமாக நடந்து வருகிறது. கடந்த வாரம் பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் கண்பார்வை இழந்தனர்.10க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில் பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள சிஸ்வா பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியின் பின்புறம் பயன்படுத்தப்படாத கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 204 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் படித்து வந்த 4ம் வகுப்பு மாணவன், கடந்த திங்கள்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு குடிபோதையில் சென்றுள்ளான். மாணவனின் நடை மற்றும் பேச்சில் மாற்றம் இருந்ததை கண்ட பெற்றோர் கண்டித்து கேட்டதில், பள்ளி கழிவறையில் இருந்த மதுவை அருந்தியதை சிறுவன் ஒப்பு கொண்டான். அளவுக்கு அதிகமான போதையால் மாணவனின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீராகியது.

சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த தகவலின் பேரில் தலைமை ஆசிரியர் நடத்திய சோதனையில், 23 அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 204 லிட்டர் வெளிநாட்டு மது கண்டெடுக்கப்பட்டது. பச்வாரா போலீசார் மதுவை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Bihar ,East Samparan district ,
× RELATED கும்பமேளா அழகி மோனாலிசா கணவர் மீது போக்சோ வழக்கு: ம.பி. போலீசார் நடவடிக்கை