திருவனந்தபுரம்: கேரளம், அசாம் ஆகிய 2 மாநிலங்களில் இன்று காலை தொடங்கிய சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்கு முன்னதாக வாக்குசாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியை பிடிக்க போவது யார் என்பது பற்றிய முடிவை இன்று வாக்களிக்கும் வாக்காளர்கள் முடிவு செய்கின்றனர்.
கேரளத்தில் மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.71 கோடி ஆகும். இந்த தேர்தலில் 883 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி வாக்குப்பதிவுக்கான உபகரணங்கள் நேற்று விநியோகம் செய்யப்பட்டன. தேர்தல் அதிகாரிகள் இவற்றுடன் நேற்று வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்றனர். இந்நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் கேரளாவில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணிக்கு முன்பே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற காத்திருந்ததை பார்க்க முடிந்தது.
அசாம்
வடகிழக்கு பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அசாமில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சிக்கு வர பாஜ முனைப்பு காட்டும் நிலையில், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் களம் காண்கிறது. மாநிலத்தில் மொத்தம் 126 தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் அதிகபட்சமாக 99 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாஜ 90 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 14 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜ 7 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தேர்தல் களத்தில் மொத்தம் 722 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 59 பேர் பெண்கள். மொத்த வாக்காளர்கள் 2.50 கோடி பேர். 31,486 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத குடியேற்றம் தடுப்பு, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட நில உரிமை, பொது சிவில் சட்ட வாக்குறுதி போன்ற விவகாரங்களை பாஜவும், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், வெறுப்புணர்வு அரசியல் போன்ற பிரனைகளை காங்கிரசும் பிரசாரத்தில் முன்வைத்தன. இங்கும் காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கான 16வது சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சிகள் இணைந்த தேஜ கூட்டணியும், காங்கிரஸ், திமுக, விசிக இணைந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. தேசிய கட்சி வேட்பாளர்கள் 34 பேர், மாநில கட்சி வேட்பாளர்கள் 63 பேர், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர்கள் 80 பேர், சுயேச்சைகள் 117 பேர் என மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 30 சட்டமன்ற தொகுதிகளில் உழவர்கரை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, நெட்டபாக்கம் ஆகிய தொகுதிகளில் அதிகபட்சமாக 14 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக ஊசுடு தொகுதியில் 5 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
புதுச்சேரி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 9,50,639. இதில், ஆண்கள் – 4,46,667, பெண்கள் – 5,03,832 மூன்றாம் பாலித்தனவர்கள் -140 என தேர்தல் துறை இறுதிவாக்காளர் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், 30 சட்டமன்ற தொகுதிகளில் 1,099 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு 1,099 விவிபேட் மற்றும் இவிஎம் இயந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு துவங்கியது. காலை முதலே பெண்கள், ஆண்கள் வரிசையில் நின்று தங்களது வாக்கை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர்.
இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி எண்ணப்படும்.
