அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயிலில் பயணம் செய்ய வேண்டாம்.!! ஈரானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல்…

தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானில் உள்ள பொது மக்கள் அடுத்து வரும் 12 மணி நேரத்திற்கு ரயில்களையும், ரயில் பாதைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இஸ்ரேல் படைகள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளன.

இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்றும் ஈரானியர்களை இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஈரான் மக்கள் அவர்களின் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம் செய்வதை தவிர்த்து கொள்ள பாரசீக மொழியில் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. “உங்கள் பாதுகாப்பைக் கருதி, இந்த நொடியிலிருந்து ஈரான் நேரப்படி இரவு 9 மணி (இந்திய நேரப்படி இரவு 11 மணி) வரை, ஈரான் முழுவதும் ரயிலைப் பயன்படுத்துவதையும் அதில் பயணம் செய்வதையும் தவிர்க்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்,” என்று இஸ்ரேல் ராணுவம் சோஷியல் மீடியாவில் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது. “அவசர எச்சரிக்கை” என்று தலைப்பிட்டு ரயில்களிலும் ரயில் பாதைகளுக்கு அருகிலும் நீங்கள் இருப்பீர்கள் என்றால் அது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறி ரயில் தண்டவாள படங்களை அந்த பதிவிலேயே இணைத்துள்ளது.

இந்த திடீர் எச்சரிக்கையானது தங்கள் நாட்டின் மீது முக்கிய மற்றும் புதிய இலக்கை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்துள்ளதை குறிப்பதாக இருக்க கூடும் என ஈரான் ராணுவம் சந்தேகிக்கிறது. கடந்த பிப்ரவரி 28 அன்று முதல் இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுடன் ஒரு மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பினரும் பரஸ்பரம் அச்சுறுத்தல்களையும் , ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளையும் தொடர்ந்து கொள்வதால், நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ரயில் பயன்பாடு தொடர்பான எச்சரிக்கை பதிவில் எந்தவொரு குறிப்பிட்ட பிராந்தியங்களோ அல்லது ரயில் பாதைகளோ குறிப்பிடப்படாததால், எங்கு தாக்குதல் இருக்கும் என்பது குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. எனினும் இஸ்ரேலின் இந்த நேரடி எச்சரிக்கை குறிப்பாக இது நாடு முழுவதும் உள்ள பொதுமக்களையும் போக்குவரத்துப் பயன்பாட்டையும் நேரடியாகக் குறிப்பிடுவதால் அந்நாட்டு மக்களிடையே பீதி நிலவுகிறது.

தற்போதைய நிலவரப்படி ஈரானில் இணைய இணைப்பு ஏறக்குறைய முழுமையான முடக்க நிலையில் உள்ளது. சர்வதேச இணையத்துடனான இணைப்பு, வழக்கமான அளவுகளில் சுமார் 1% மட்டுமே உள்ளது. இந்த இணைய முடக்கம் ஐந்து வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது; இது நாட்டின் வரலாற்றிலேயே மிக நீண்ட கால முடக்கமாகும். இந்த சூழலில் இஸ்ரேலிய ராணுவத்தின் இந்த எச்சரிக்கை அனைத்து ஈரானியர்களுக்கும் சென்று சேருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

 

Related Stories: