×

மேற்கு ஆசியா போரால் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிக்கவில்லை: ஒன்றிய அரசு தகவல்

 

புதுடெல்லி: மேற்கு ஆசியா போரில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான விளக்க கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் உரையாற்றிய ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் அனுபம் மிஸ்ரா கூறுகையில், ‘‘ இதுவரை நாங்கள் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் அசாதாரண ஏற்ற, இறக்கங்கள் எதுவும் இல்லை. அரசாங்கத்திடம் 28 லட்சம் டன் பருப்பு வகைகளின் கையிருப்பு உள்ளது. வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றின் உற்பத்தி கடந்த ஆண்டுக்கு நிகராக உள்ளது.
எனவே விநியோகத்தில் எந்த தடைகளும் இல்லை.

எந்தவொரு கள்ளச்சந்தை அல்லது பதுக்கலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளிடம் வலியுறுத்தி உள்ளோம்’’ என்றார். உணவு மற்றும் பொது விநியோக துறையின் இணை செயலாளர் சி. ஷிகா கூறுகையில், ‘‘அரசிடம் 222 லட்சம் டன் கோதுமையும், 380 லட்சம் டன் அரிசியும் கையிருப்பில் உள்ளது. இது கையிருப்பு விதிமுறைகளை விட சுமார் 3 மடங்கு அதிகம். எனவே, பொது விநியோக அமைப்பின் (ரேஷன்) தேவையையும், எந்தவொரு அவசரத் தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமான கோதுமை, அரிசி கையிருப்பு உள்ளது’’ என்றார்.

 

Tags : West Asia War ,Union Government ,New Delhi ,Delhi ,Union Consumer Affairs Department ,Anupam Mishra ,
× RELATED சுங்கச்சாவடிகளில் புதிய டிஜிட்டல் விதிமுறைகள் மற்றும் கட்டண மாற்றங்கள்!