பீகாரில் 82 ஏக்கரில் பயிரிடப்பட்ட கோதுமை பயிர்கள் விவசாயிகளின் கண் எதிரிலேயே தீயில் கருகி நாசம்.!!

பீகார் மாநிலத்தில் 82 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கோதுமை பயிர்கள் சமீபத்தில் தீயில் கருகி சேதமானது. வறட்சி மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஆனால் குறிப்பிட்ட கோதுமை வயல்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மின்மாற்றி அதாவது டிரான்ஸ்ஃபார்மரிலிருந்து வெளியான சில தீப்பொறிகளே, காய்ந்து நின்ற கோதுமைப் பயிர்களை தீயில் கருகி சேதமாக காரணமாக இருந்ததாக உள்ளூர் மக்களில் சிலர் தகவல் தெரிவித்து உள்ளனர். திடீரென பலத்த காற்று வீசியதால் வயல்களில் பயிரிடப்பட்டிருந்த கோதுமை பயிர்களில் தீ மளமளவெனப் பரவி, மிக விரைவிலேயே கட்டுப்பாட்டை மீறி சென்றதாக கூறப்படுகிறது.

பீகாரின் லலித்பூர் மாவட்டத்தின் மடவாரா வட்டத்தில் அமைந்துள்ள கரிடோரன் கிராமத்தில்,சமீபத்தில் திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து உள்ளனர். தீ விபத்தை நேரில் கண்ட மக்களில் சிலர் டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து தீப்பொறிகள் விழுந்த சில வினாடிகளிலேயே கோதுமை வயல்களில் தீ வேகமாக பரவத் தொடங்கியதாகவும்; சிறிது நேரத்திற்குள்ளாகவே, பரந்த நிலப்பரப்பில் விளைந்து நின்றிருந்த கோதுமை பயிர்கள் தீ-க்கு இரையாகியதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்

இதனிடையே வயலில் பயிர்கள் தீயில் கருகி நாசமாகி கொண்டிருக்கும் தகவல் கிடைத்ததும் அருகிலிருந்த கிராமங்களைச் சேர்ந்த பலர் வாளிகள், பம்ப் செட்டுகள் மற்றும் பிற உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியின் காரணமாக சுமார் 3 மணி நேரம் கடுமையாக போராடி கிராம மக்கள் வெற்றிகரமாகத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். தீயிலிருந்து தங்கள் பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, பாதிக்கப்பட்ட இடத்தில கோதுமை பயிரிட்டிருந்த விவசாயிகள் தாங்களே களத்தில் இறங்கி, தீ பரவி வந்த திசைக்கு நேர் முன்னால் இருந்த வயல்களை உழத் தொடங்கினர். மற்ற விவசாயிகள் அருகிலிருந்த மரங்களில் இருந்து மரக்கிளைகளை ஒடித்து, அவற்றைக் கொண்டு தீயை அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விவசாயிகள் ஏறக்குறைய மூன்று மணி நேரம் மேற்கொண்ட கடும் போராட்டத்திற்குப் பிறகு, தீ இறுதியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்தில் கருகி நாசமாகிய கோதுமை பயிர்களை பயிரிட்டிருந்த விவசாயிகளில் பெரும்பாலோர், வங்கிகள் மற்றும் உள்ளூர் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கித்தான் விவசாயம் மேற்கொண்டிருந்ததாகவும், அறுவடைக்குத் தயாராக இருந்த கோதுமை பயிர்களை தீ விபத்தில் இழந்த அந்தப் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அவல நிலையை மிகவும் துயரமானது என்றும் அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். அறுவடைக்கு தயாராக நின்றிருந்த பல ஏக்கர் கோதுமை பயிர்களை எதிர்பாராமல் ஏற்பட்ட தீ முழுமையாகச் சூழ்ந்து நாசமாக்கிய சம்பவம் பலரையும் கவலைகொள்ள செய்து உள்ளது.

Related Stories: