மாமல்லபுரத்தில் குரங்குகளால் சுற்றுலா பயணிகள் அவதி: துரத்தி துரத்தி கடிக்க பாய்கின்றன

 

மாமல்லபுரம்: மாமல்லபுரம் நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியை சுற்றி பல இடங்களில் மரங்கள் செடி-கொடிகள் அடர்ந்து காணப்படுவதால், சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த குரங்குகள் குட்டிபோட்டு பெருகி விட்டன. ஆரம்ப காலத்தில், பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் வீசி எறியும் உணவு பொருட்களை தின்று வளர்ந்த குரங்குகள், நகராட்சி முழுவதும் வீடுகளுக்கு வெளியே உள்ள தென்னை, மா, பலா, வாழை மற்றும் கொய்யா உள்ளிட்ட மரங்களில் உள்ள பழங்கள் மற்றும் காய்களை கடித்து சேதப்படுத்தி வருகின்றன.

மேலும், வீடுகளுக்குள் புகுந்து சமைத்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், திண்பண்டங்கள் என கண்ணில் பட்டதையெல்லாம் சேதப்படுத்துகின்றன. வீட்டிற்குள் புகுந்த குரங்குகளை விரட்ட முயன்றால் ஒன்று கூடி கடிக்க முற்படுகின்றன. குறிப்பாக, குழந்தைகள் குடிக்க வைத்திருக்கும் பாலை குடித்துவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. சில வீடுகளில் மாணவ – மாணவிகளின் புத்தங்களையும் குரங்குகள் கிழித்து சேதப்படுத்துகின்றன. இதேபோல், அரிசி கடை, மளிகை கடை, காய்கறி கடைகளுக்குள் புகுந்து சேதப்படுத்துகிறது. குறிப்பாக, மாமல்லபுரம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் உணவு பைகளையும், ஹேண்ட் பேக்கையும் பிடுங்கி செல்கின்றன.

திண்பண்டங்களை கொடுக்க மறுக்கும் சுற்றுலாப் பயணிகளை துரத்திதுரத்தி கடிக்க பாய்ந்து அங்கிருந்து தப்பி ஓடி விடுகிறது. மாமல்லபுரம் நகரம் முழுவதும் சுமார் 150 முதல் 200 குரங்குள் ஜாலியாக சுற்றி உலா வருகின்றன. குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காட்டில் விடுவது வனத்துறையினரின் கடமை என்பதால், நாம் ஏன் தேவையில்லாமல் தலையிட வேண்டும் என தொல்லியல் துறை மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக உள்ளூர் மக்கள் குமுறுகின்றனர். இதனால், மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.

இதுகுறித்து, பலமுறை வனத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக செயல்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட வனத்துறை உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: