1. உங்களை எதிர்த்துப் பாஜ முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை போட்டியிடுகிறார். அதனால் உங்களுக்கு நெருக்கடி உள்ளதா? அவருடனான போட்டியை எப்படிப் பார்க்கிறீர்கள்? நெருக்கடி எல்லாம் ஒன்றும் கிடையாது. திமுகவுக்குப் போட்டியைச் சந்தித்துத்தான் பழக்கமே தவிர, யார் வந்து நின்றாலும் நாங்களும் மயிலாப்பூர் மக்களும் கவலைப்படப் போவதில்லை.
ஏனென்று சொன்னால், பாஜவைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் யாரை ஜெயிக்க வைக்கணும், யாரை ஆட்சி செய்ய வைக்க வேண்டுமென. இன்றைக்குப் பிரதமர்கூட வருவதற்கு யோசிக்கிறார். அப்படிப்பட்ட தொகுதியாக இது மாறியிருக்கிறது. இப்போது பிரதமர் வரவில்லை; இரண்டாம் கட்டத் தலைவர்களை அனுப்பிப் பார்க்கலாம் அப்படின்னு ஒரு முயற்சி பண்றாரு. நிச்சயமாகத் தமிழ்நாட்டுக்குள்ள எதுவுமே நடக்காது.
2. திமுக அரசு செய்த திட்டங்கள், மக்களிடம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது? இது எந்த அளவுக்கு உங்களுக்குச் சாதகமாக இருக்கும்? நாங்கள் மக்களிடம் செல்லும்போது ஒரு முகச் சுளிப்பு உள்ளிட்ட எதுவும் இல்லை. எல்லாருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்; மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள். இது எங்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுக்குது.
ஏனென்று சொன்னால் செயல்படுத்திய திட்டங்கள் எல்லாம் அந்த அளவு மக்களிடம் சென்றடைந்துள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், கல்லூரி மாணவ மாணவிகளுக்கான உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை நிறையப் பேருக்குச் சென்று சேர்ந்துள்ளது. திட்டங்கள் மூலம் பயன்பெறுபவர்கள் அதை எங்களிடம் சொல்லி மகிழ்ச்சியடைகிறார்கள்.
3. விஜய் வருகை உங்கள் தொகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? அக்கட்சி பொருளாளர் இங்கு போட்டியிடுகிறார். பெண்கள், இளம் வாக்காளர்கள் ஓட்டு அவர்களுக்கு என்று சொல்கிறார்களே? என்னைப் பொறுத்தவரைக்கும் நான் பரப்புரைக்கு வரும்போது இளைஞர்களும், இளம் பெண்களும் நிறையப் பேர் வந்து எங்க கூடவே பரப்புரைக்கு வருகிறார்கள்; வாக்குக் கேட்கிறார்கள். அவரோட தாக்கம் எவ்வளவு இருக்கும் என்பது யாராலுமே யூகிக்க முடியாது. ஆனாலும், நாங்க களத்துல இருக்குறவங்க; களத்துல உள்ள நிலவரம் எங்களுக்குத் தெரியும். அது ஒரு மாயையில ஓடிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக அந்த மாயை தேர்தலோட முடியும்.
4. மழை காலங்களில் மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையில் தண்ணீர் நிற்பது வாடிக்கையாக இருந்தது. தற்போது மழைநீர் கால்வாய் பணி மூலம் தண்ணீர் நிற்பதில்லை. இது போன்று தொகுதியில் நீங்கள் செய்த பணிகள் உங்களுக்குக் கைகொடுக்குமா? மயிலாப்பூர் தொகுதியின் களம் எப்படி இருக்கு? நான் தொகுதியில் செயல்படுத்திய திட்டங்களை எல்லாம் ஒரு புத்தகமாகப் போட்டு தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதம் முன்பே வீடு வீடாக கொடுத்துட்டேன்.
குறிப்பாக, மழைநீர் வடிகால் மிகப்பெரிய நன்மையைக் கொடுத்திருக்கு. கடந்த காலங்களில் மழைக்காலத்தில் வீட்டில் இருக்க முடியாத சூழல் இருந்தது. இன்றைக்கு வடிகால் பணிகளால் மழைநீர் தேங்காத சூழல் ஏற்பட்டுள்ளது. வடிகால் பணி என்றால் உடனே கால்வாய் கட்டுவது மட்டும் கிடையாது. நம்முடைய முதல்வர் ஒரு குழு அமைத்தார். அந்தக் குழு ஆய்வு செய்து, கால்வாய் அமைத்தால் மட்டும் போதாது, அதை எப்படியெல்லாம் வடிவமைக்க வேண்டும் என ரொம்பத் தெள்ளத்தெளிவாக அறிக்கை அளித்தது.
அதன்படி மயிலாப்பூர் பகுதியில் 44 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் அது ஒரு மிகப்பெரிய சக்சஸ். அதை மக்கள் கடந்த மழையில் உணர்ந்து விட்டார்கள். மழைநீர் வடிகால் அமைக்கப்பட்ட பிறகு அந்தப் பகுதி மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்கள். அதனால், அது இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
