எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு போவதை தடுத்தவர்கள் யார் தெரியுமா? ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

தேனி மாவட்டம், போடியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் போடி தொகுதி திமுக வேட்பாளரான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: இன்றைய அரசியல் சூழலில் திமுகவில் நான் இணைந்ததை அனைவரும் வரவேற்கின்றனர். அதற்கு காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய குணங்களை பெற்று அனைவரையும் அரவணைக்கும் பக்குவமிக்க ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டுமே என்பதால் தான்.

அவரது தலைமையில் செயல்படும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளில் இதுவரை யாரும் வெளியேறினார்கள் என்ற நிலை இல்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, தனக்குத் தானே கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் கூட்டணியின் தலைவர் என்று உருவாக்கிக் கொண்டு கூறி வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமிஅரசியல் நாகரீகம் இல்லாத தலைவராக உள்ளார். அவருக்கு படுதோல்வி உறுதி. ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலை உருவாக்கியுள்ளது. அதனால் ஈபிஎஸ் மூளை அவுட் ஆகிவிட்டது.

கலைஞரை பற்றி பேச ஈபிஎஸ்க்கு தகுதியில்லை. அண்ணாவின் தம்பியாக, பெரியாரின் சிஷ்யனாக எவ்வளவோ சோதனைகளை தாண்டி தமிழக மக்களுக்கு சமூக நீதியை பெற்றுக் கொடு்த்தவர் கலைஞர். அத்தகைய தலைவர் குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? இன்றைய அரசியலில் அதிமுகவைப் பற்றியோ அல்லது அதன் தலைவர்கள் குறித்தோ யாரும் பேசுவதில்லை.

அதே நேரத்தில் திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து மட்டுமே அனைவரும் பேசுகின்றனர் அதற்கு காரணம், ஐந்தாண்டுகளில் அவர் செய்த மக்கள் நலத்திட்டங்கள் தான். தற்போது எடப்பாடி பழனிசாமி என்னை துரோகி என்கிறார். பல்வேறு சோதனைகளுக்கு நான் உள்ளாக்கப்பட்டேன். துரோகம் யார் செய்தது. அவர்தான் செய்திருக்கிறார். தற்போது கூட்டங்களில் அவர் கத்துவதற்கு தவறவில்லை. ஏன் கத்துகிறார்?.

அவர் கத்துவதில் அர்த்தம் இல்லை. வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சீட் கூட கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. அவருக்கு மூளை அவுட்டாகி விட்டது. அவுட்டானால் அமைதியாக இருக்க வேண்டும். கலைஞர், ஸ்டாலின் குறித்து பேச தகுதி இருக்கா உனக்கு? யாரால் நீ அரசியலுக்கு வந்தாய், யாரால் பதவி பெற்றாய்? எந்த அரசியல் வரலாறும் இல்லை. அவர் ஜெயிலுக்கு போக இருந்ததை காப்பாற்றியது யார் தெரியுமா? செல்வகணபதி, முத்துசாமி ஆகியோர் தான் காப்பற்றினர். இவ்வாறு கூறினார்.

Related Stories: