கடந்த அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால், 2026 சட்டமன்ற தேர்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கவில்லை. அவிநாசி தொகுதியை கூட்டணி கட்சியான பாஜவிற்கு ஒதுக்கி, அங்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.
இதனிடையே, ஜெயலலிதா மறைவின் போது, கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில், எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 18 எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து, அதிமுக ஆட்சியை காப்பாற்றிய தனக்கு, தேர்தலில் போட்டியிட சீட் தராமல் புறக்கணித்ததாகவும், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தன்னை, அதிமுக நிர்வாகிகள் யாரும் வந்து சந்திக்கவில்லை என்றும், அந்த ஆதங்கத்தில் தான் தன்னுடைய மகன் தவெகவில் சேர்ந்து விட்டதாகவும் மாஜி சபாநாயகர் தனபால் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும், தன்னை கட்சியில் இருந்து திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியதாகவும் அவர் குமுறலை வெளிப்படுத்தி இருந்தார். இதற்கிடையே, தனபாலின் மகன் லோகேஷ் தனபாலுக்கு, ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தவெக தலைமை வாய்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், அவிநாசி சட்டமன்ற தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மாஜி சபாநாயகர் தனபாலின் சேலம் வீட்டிற்கு சென்று அவரை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது, பொன்னாடை அணிவித்து, அவரது காலில் விழுந்து வணங்கினார்.
பின்னர், தேர்தலில் தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொண்டார். அவரிடம் அதிமுக தலைமை தன்னை ஒதுக்கி விட்டதாக கூறி, தனபால் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதிமுகவினர் யாரும் தன்னை வந்து பார்க்கவில்லை என தனபால் கூறிய பிறகும், அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் யாரும் அவரை சந்திக்காத நிலையில், பாஜவை சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அவரை சந்தித்து நலம் விசாரித்தது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
