கடம்பத்தூரில் கற்கள் பெயர்ந்த சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

 

திருவள்ளூர், ஏப்.6: கடம்பத்தூர் ஊராட்சியில் கற்கள் பெயர்ந்த ஒன்றிய சாலையால் பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரிலிருந்து ரயில் நிலையம் வழியாக அதிகத்தூர் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது. இந்த சாலையை கடம்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மணவாளநகர், திருவள்ளூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர். சேதமடைந்த இந்த ஒன்றிய சாலை, 2020-21ம் ஆண்டு ஊரக வளர்ச்சித்துறை உள்ளாட்சித் துறையின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.62.09 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் ரயில் நிலையம் அலுவலகம் வரை, சிமெண்ட் சாலையாகவும், அதனைத் தொடர்ந்து தார் சாலையும் போடப்பட்டது. இந்த சிமெண்ட் சாலை தற்போது ஆங்காங்கே சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக அதிகத்தூர், மணவாளநகர் மற்றும் ரயில் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிள்களில் செல்பவரர்களும், நடந்து செல்பவர்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் கடம்பத்தூரிலிருந்து ரயில் நிலையம் வழியாக அதிகத்தூர் செல்லும் ஒன்றிய சாலையை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: