போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதில் மாயமான 2வது வீரரை மீட்டது அமெரிக்கா: மீட்பு பணியில் 2 விமானம், 2 ஹெலிகாப்டரை இழந்தது

 

வாஷிங்டன்: அமெரிக்க போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதில் மாயமான 2வது வீரரை 36 மணி நேர தேடுதல் பணியில் அமெரிக்கா பத்திரமாக மீட்டது. இந்த மீட்புப் பணியில் அமெரிக்காவின் 2 சரக்கு விமானம் மற்றும் 2 ஹெலிகாப்டர்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவின் எப்-15இ போர் விமானம் ஈரான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதில் ஒரு விமானி அமெரிக்காவால் மீட்கப்பட்டு மற்றொரு வீரர் மாயமானார். அவரை அமெரிக்காவும், ஈரானும் மிகத் தீவிரமாக தேடி வந்தன. அமெரிக்க வீரரை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகையை ஈரான் அறிவித்ததால், ஈரான் மக்களும் பலர் மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், 36 மணி நேர தேடுதலுக்குப் பிறகு, ஈரானின் கோஹ்கிலுயே மற்றும் போயர்-அஹ்மத் மாகாணத்தில் உள்ள கோஹ்-இ சியா பகுதியில் மாயமான வீரர் இருப்பதை அமெரிக்கா கண்டுபிடித்தது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் அனுப்பப்பட்டனர். சிஐஏவும் களமிறக்கப்பட்டது. சிஐஏ தான் அமெரிக்க வீரரை கண்டறிந்து அவரது துல்லியமான இருப்பிடத்தை பென்டகனுக்கு வழங்கியது. 12க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈரானுக்குள் விரைந்தன. ஈரான் ராணுவத்தை திசைதிருப்பும் வேலையில் சிஐஏ ஈடுபட்ட நிலையில், அமெரிக்க ராணுவம் அப்பகுதியில் தாக்குதல் நடத்தி யாரும் அமெரிக்க வீரரை நெருங்காமல் பார்த்துக் கொண்டது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது.

இதில், அமெரிக்க வீரர் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில் உறுதி செய்தார். அந்த வீரர் காயமடைந்திருப்பதாகவும் ஈரானில் இருந்து பத்திரமாக அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டதாகவும் டிரம்ப் பாராட்டி உள்ளார். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதும் பாராசூட் உதவியுடன் மலைப்பகுதியில் குதித்த அந்த வீரர் ஈரான் ராணுவத்திடம் இருந்து தப்பிக்க மலைகளுக்கு இடையேயான இடுக்கில் மறைந்துள்ளார். படுகாயமடைந்த நிலையிலும் 24 மணி நேரம் வாழ்வா சாவா போராட்டத்துடன் அந்த வீரர் 7,000 அடி உயர மலை உச்சிக்கு ஏறிச் சென்றுள்ளார். அங்கு அவரது இருப்பிடத்தை சிஐஏ கண்டுபிடித்ததும் அமெரிக்க படையினர் விரைந்து சென்று மீட்டதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மீட்பு பணி சண்டையில் அமெரிக்காவின் 2 சி130 சரக்கு விமானம் மற்றும் 2 பிளாக்ஹாக் ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஆயுதப் படைகளின் மத்திய கட்டளை மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார். மேலும் ஈரானில் 5 பேர் வீரமரணம் அடைந்திருப்பதாகவும் மாகாண அதிகாரி இராஜ் காசிமிஜு கூறி உள்ளார். இதுவரை இப்போரில் அமெரிக்கா தனது போர் விமானங்களை இழந்தது குறித்து எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை.

 

Related Stories: