திருமங்கலம்,: திமுக அரசின் திட்டங்களை பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் கேளுங்கள், தமிழ்நாட்டில் என்டிஏ தான் திவாலாக போகிறது என்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்து திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அமைதியையும், வளர்ச்சியையும், சகோதர பாசத்தையும் முன்னிறுத்தக்கூடிய தமிழ்நாட்டோட டிஎன்ஏவுக்கு மாறாக, சொந்த மண்ணுக்கு சொந்த மக்களுக்கு துரோகம் இழைக்கக்கூடிய கட்சியா என்டிஏ இருக்கு. இவங்கதான் டபுள் இன்ஜின் டப்பாவாக தமிழ்நாட்டுக்குள்ள வர நினைக்கிறாங்க. இவங்க லட்சணம் என்ன? மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை 2015 பட்ஜெட்ல அறிவிச்சாங்க. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது அடிக்கல் நாட்டுனாங்க. அதுக்குப்பிறகு 2021 சட்டமன்ற தேர்தலும் முடிந்து விட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலும் முடிந்து விட்டது.
இப்போ 2026 சட்டமன்றத் தேர்தலும் வந்து விட்டது. ஆனா எய்ம்ஸ் மட்டும் வரவே இல்லை. மதுரை எய்ம்ஸ் பேப்பரில் இருக்கிறதே தவிர நிலத்தில் இல்லை. இமாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூரில் 2017 அடிக்கல் நாட்டி 2022ல ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க முடிஞ்ச அவங்களால மதுரை எய்ம்ஸ் ஏன் உருவாக்க முடியல? இதுவே நம்முடைய திராவிட மாடல் அரசை பாருங்கள். ஒன்றரை வருஷத்துல சென்னை கிண்டியில கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, கோவையில செம்மொழி பூங்கா உருவாக்கினோம். கீழடி, பொருநை அருங்காட்சியகங்களை திறந்து வைத்துள்ளோம். கோவை பெரியார் அறிவுலக நூலகம், திருச்சியில் காமராஜர் நூலகம், ஆட்சிக்கு வந்தவுடனே முதல் நிகழ்ச்சியா அதைத்தான் நான் திறக்கப் போறேன். ஏன் பாஜ நம்ம மாதிரி வேகமாகச் செயல்பட முடியல? ஏன்னா அவங்களுக்குத் தமிழ்நாட்டின் மேல இருக்கக்கூடிய வெறுப்பு அப்படிப்பட்டது. அதனால்தான் கீழடி நம் தாய்மடி என நாம் கொண்டாடுகிற கீழடி ஆய்வறிக்கையை இப்ப வரை வெளியிட மறுக்கின்றனர். இரும்பினுடைய பயன்பாடு தமிழகத்தில் இருந்துதான் தொடங்கிச்சுன்னு அறிவியல்பூர்வமாக நாம் நிரூபிச்சிருக்கோம்.
அந்த ஆய்வு முடிவை வெளியிட்டதுக்குப் பின்னால பிரதமரோ, பாஜ அரசோ ஒரு வாழ்த்துக் கூட இதுவரை சொல்லவில்லை. அண்மையில கூட நம்ம மதுரைக்காக மெட்ரோ ரயில் திட்டத்தைக் கேட்டோம். ஆனா ஆந்திரா, போபால், பாட்னா போன்ற நகரங்களுக்குக் கொடுத்தாங்களே தவிர மதுரைக்கும் கோவைக்கும் மறுத்து விட்டனர். இப்படிப்பட்ட துரோக கூட்டணிதான் என்டிஏ. தமிழ்நாட்டின் மீது வன்மத்தோடு செயல்படக்கூடிய என்டிஏவோட சதித் திட்டங்களை வென்று வளர்ச்சிப் பாதையில நம்முடைய சாதனைப் பயணத்தைத் தொடர வேண்டும். பத்தாண்டு காலத்துல தமிழ்நாட்டோட வளர்ச்சியைச் சீரழித்தது அதிமுக. அதுக்குத் துணை போனது பாஜ. நீங்க மறந்திருக்க மாட்டீங்க, 2021ல உங்க ஆதரவோட தமிழ்நாட்டை மீட்டெடுத்து இன்றைக்கு இந்தியாவுல நம்பர் ஒன் மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கோம். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய மாடல் திராவிட மாடல்னு சொல்லக்கூடிய அளவுக்கு மாநிலத்தைத் தலைநிமிர வச்சிருக்கோம். இதே மதுரையில ஆரம்பிக்கப்பட்டதுதான் 19 லட்சம் பள்ளி மாணவர்களுக்குச் சூடான, சுவையான, சத்தான காலை உணவுத் திட்டம். இந்தத் திட்டத்தை எட்டாம் வகுப்பு வரைக்கும் விரிவாக்கம் செய்யப் போகிறோம். இப்படி நாள் முழுக்க பட்டியலிட முடியும். இந்தியாவிலேயே அதிகத் திட்டங்களைத் தமிழ்நாட்டுல திராவிட மாடல் அரசுதான் செயல்படுத்துகிறது.
இது தெரிந்தும் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாட்டுல எந்தத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அரசோட பணம் எல்லாம் எங்கே போகுது? கடன் சுமை அதிகரித்து விட்டது. தமிழ்நாடு திவாலாகப் போகுது என்று எந்தப் புரிதலும் இல்லாமப் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டுல எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பது தெரியாமல், எங்கள் திட்டங்களுக்கெல்லாம் பெயரை மாத்தி அறிக்கை வெளியிட்டுக்கிட்டு இருக்கிறார் பியூஷ் கோயல். தமிழ்நாடு அரசோட பணமெல்லாம் எங்கே போகுதுன்னு கேட்குறீங்களே… எல்லாமே நேரடியா மக்களுக்குத்தான் போகிறது. நாங்க கேட்கிறது தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிய அரசுக்குக் கட்டக்கூடிய வரிப் பணமெல்லாம் எங்கே போகுது? தமிழ்நாட்டுக்கு எண்பதாயிரம் கோடி ரூபாய் கொடுத்திருக்கோம்னு அவர் சொல்லியிருக்கிறார். அப்படியே உபி, மபி, பீகார், ராஜஸ்தான் போன்ற நீங்க ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கீங்க என்பதையும் சேர்த்துச் சொல்லுங்க. அப்பதான் தமிழ்நாட்டை நீங்க எந்த அளவுக்கு வஞ்சிக்கிறீங்கன்னு தெளிவா புரியும். இது தெரிந்தும், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், “தமிழ்நாட்டில் எந்தத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அரசின் பணம் எல்லாம் எங்கே போகிறது? கடன்சுமை அதிகரித்துவிட்டது, தமிழ்நாடே திவால் ஆகப் போகிறது” என்று எந்தப் புரிதலும் இல்லாமல் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதை, எங்கள் திட்டங்களுக்கெல்லாம் பெயரை மட்டும் மாற்றி அறிக்கை வெளியிட்டிருக்கும் பழனிசாமியிடம் கேளுங்கள். அவர் சொல்வார். தமிழ்நாடு அரசின் பணமெல்லாம் எங்கே போகிறது என்று கேட்கிறீர்களே…? எல்லாமே நேரடியாக மக்களுக்குதான் போகிறது. ஒரு மாதம் முன்னால் கூட எல்லோருக்கும் 5 ஆயிரம் போனதே! உங்களுக்கு தெரியாதா? அது இங்கு இருக்கும் பயனாளிகள் எல்லோருக்கும் தெரியும்.
தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசியிருக்கிறீர்களே… நேற்று உங்கள் அமைச்சரவை நண்பர் தர்மேந்திர பிரதானுக்கு ஒரு சவால் விட்டேன். இன்று உங்களுக்கு ஒரு சேலஞ்ச் செய்கிறேன். தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு கொடுக்கும், ஒரு ரூபாய்க்கு பதிலாக திரும்ப எங்களுக்கு எவ்வளவு கிடைக்கிறது? அதுவே, பாஜ ஆளும் மாநிலங்களுக்கு எவ்வளவு கிடைக்கிறது? இந்த கம்ப்பேரிசனை வெளிப்படையாக அறிவிக்க உங்களால் முடியுமா? சொன்னால் உங்கள் குட்டு வெளிப்பட்டுவிடும். நான் உண்மையை உடைத்து சொல்லவா? பாஜ ஆளும் வடமாநிலங்களுக்கு தரும் அதே அளவு நிதிப் பகிர்வை தமிழ்நாட்டிற்கும் நீங்கள் வழங்கினால், தமிழ்நாட்டுக் கடனே அடைந்து, நமக்கு நிதி நெருக்கடியே இருக்காது. எங்கள் பணத்தையே வாங்கிக்கொண்டு, எங்களிடமே பணம் எங்கே போகிறது என்று கேட்கிறீர்களே… இது நியாயமா? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்று சொல்லுவார்களே… அது இதுதானா?
பாஜவுக்கு திமுக மீதான கோபம் மட்டுமல்ல, அவர்களுக்கு தமிழ்நாடு மேலேயே வெறுப்புதான். இத்தனை நிதி நெருக்கடியை கொடுத்தும், பொருளாதார வளர்ச்சியில், ஜிடிபி வளர்ச்சியில், தனிநபர் வருமானத்தில், ஆடை, காலணிகள், மின்னணு பொருள் ஏற்றுமதியில், இப்படி எல்லாவற்றிலும் நாம் நம்பர் ஒன் ஆக இருந்தால் வெறுப்பு வரத்தானே செய்யும்? அதற்காக, இந்தியாவின் மிக முன்னேறிய மாநிலத்தை பார்த்து, திவால் ஆகிவிடுவோம் என்ற ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சொல்வது ரொம்ப ‘டூ மச்’. பார்த்துக் கொண்டே இருங்கள். என்டிஏ-தான் தமிழ்நாட்டில் திவால் ஆகப் போகிறது.
நிதி நிர்வாகம் பற்றி தமிழ்நாட்டுக்கு இவ்வளவு அக்கறையாக பாடம் எடுக்கிறீர்களே… பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்தியப் பொருளாதாரத்தின் நிலை என்ன? ஆட்சிக்கு வந்தால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை அப்படியே தூக்கி நிறுத்திவிடுவோம் என்று வாய் கிழிய பேசினீர்களா? இல்லையா? இன்று, என்ன நிலைமை? வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு பாஜ ஆட்சியில் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் நாளில் செஞ்சுரி போடப் போகிறது. முதலில் அதை எப்படி தடுப்பது என்று பாருங்கள். பரீட்சையில் தோல்வி பெற்ற மாணவன் வந்து எல்லா பாடப் பிரிவிலும் டாப்பராக இருக்கும் எங்களுக்கு அட்வைஸ் பண்ணலாமா? முதலில் நீங்கள் ‘பாஸ்-மார்க்’ ஆச்சும் பெற்றுவிட்டு வந்து அதன் பிறகு தமிழ்நாட்டு கதையை பேசுங்கள். 2021ல் திராவிட மாடல் ஆட்சிக்காக, மக்களின் ஆதரவைக் கேட்டு வரும்போதே, அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை உறுதிமொழிகளாக கொடுத்துவிட்டுதான் வாக்கு கேட்டேன். அந்த அடிப்படையில், திராவிட மாடல் என்பது, 2.0 ஆட்சியில், எதிர்கால தமிழ்நாட்டை கட்டமைக்கப் போகும் செயல்திட்டம் அடங்கிய தேர்தல் அறிக்கையை சூப்பர் ஸ்டாராக களமிறக்கியிருக்கிறோம். இந்த தேர்தலின் சூப்பர்ஸ்டார் யார்? நம்முடைய தேர்தல் அறிக்கை. இந்த ஸ்டாலின் ஒரு தடவை சொன்னால் அதை நிச்சயம் நிறைவேற்றிக் கொடுப்பான். தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சியே தொடர்ந்திட, தமிழ்நாடு வளர்ந்திட ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை. இவ்வாறு பேசினார்.
