×

நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது; கேரளாவில் 928 வேட்பாளர்களில் 355 பேர் மீது குற்ற வழக்கு நிலுவை: ஜனநாயக சீர்திருத்த சங்கம் தகவல்

புதுடெல்லி: கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 38 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற கேரள சட்டசபை தேர்தலில், மொத்தம் ஆய்வு செய்யப்பட்ட 928 வேட்பாளர்களில் 355 பேர் மீது குற்ற வழக்குகள் இருந்தன. இதில் 167 பேர் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். இந்த நிலையில், வருகிற 9ம் தேதி கேரள சட்டசபை தேர்தல் நடக்கிறது. வரும் 7ம் தேதியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.) சார்பில் புதிய ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடும் 863 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இது குறித்து ெவளியிட்ட அறிக்கையில், ‘கேரள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 324 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 201 பேர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, 15 வேட்பாளர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்களில் தொடர்புடையவர்கள். இவர்களில் ஒருவர் மீது தொடர் பாலியல் பலாத்கார புகார் உள்ளது. 4 பேர் மீது கொலை வழக்குகளும், 13 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கட்சி வாரியாக பார்க்கும் போது, காங்கிரஸ் கட்சியின் 85 வேட்பாளர்களில் 72 பேர் மீதும், பாஜகவின் 93 வேட்பாளர்களில் 59 பேர் மீதும், சிபிஎம் கட்சியின் 77 வேட்பாளர்களில் 51 பேர் மீதும் வழக்குகள் உள்ளன. அதேபோல், ஐ.யு.எம்.எல். கட்சியின் 25 வேட்பாளர்களில் 21 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வேட்பாளர்களில் 13 பேரும் குற்றப்பின்னணி உடையவர்கள்.

குற்றப்பின்னணி உள்ளவர்களை ஏன் வேட்பாளராக நிறுத்தினோம் என்பதற்கு உரிய காரணங்களை தெரிவிக்க வேண்டும் என கடந்த 2020ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அரசியல் கட்சிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. வேட்பாளர்களின் வருவாய் மற்றும் நிதி நிலையை பொறுத்தவரை, 39 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். மொத்த வேட்பாளர்களில் 339 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை கொண்டுள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியில் 61 பேரும், பாஜக மற்றும் சிபிஎம் கட்சியில் தலா 52 பேரும் கோடீஸ்வரர்கள். கடந்த 2021ம் ஆண்டில் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 1.69 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அது 2.78 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அனைத்து முக்கிய கட்சிகளும் பண பலம் மிக்கவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது இதன் மூலம் உறுதியாகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala ,Democratic Reforms Association ,New Delhi ,Kerala Assembly elections ,
× RELATED தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில்...