முத்துப்பேட்டை,ஏப்.5: முத்துப்பேட்டை மயானத்தை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நடப்பட்டு, தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கல்லடிக்கொல்லை கிராமத்தின் பொது மயானம் வைரவன்சோலை கோரையாறு அருகே உள்ளது. இந்த மயானம் கருவை காடுகள் மண்டி இதனை பயன்படுத்த முடியாதளவில் காணப்பட்டது.
அதேபோல் தண்ணீர் வசதியும் இல்லமல் இருந்ததால் கருவை காட்டிற்குள் புகுந்து சென்று கோரையாற்றில் சென்று தண்ணீர் எடுத்து வரப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வந்தனர். அதனால் இந்த மயான வளாகத்தை சுத்தம் செய்யும் தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனையடுத்து சமீபத்தில் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் ஊராக வளர்ச்சி துறை சார்பில் மயான வளாகத்தில் இருந்த செடி கொடிகள் அகற்றப்பட்டதுடன் இங்கு வரும் மக்கள் பயன் பெரும் வகையில் அடிபைப்பு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முத்துப்பேட்டை பகுதியில் கடும் வெயில் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. அதனால் இந்த சுடுகாட்டுக்கு வரும் மக்கள் வெயிலை சமாளிக்கும் வகையில் மரங்களை உருவாக்க முடிவு செய்து மரக்கன்று நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி கார்த்திகேயன், ஊராட்சி செயலர் முத்தையா, சமூக ஆர்வலர் பசுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
