அரியலூர், ஏப்.5: அரியலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மிதமான மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் சொல்ல முடியாத அளவிற்கு வெப்பம் சுட்டெரிப்பதால் மக்கள் வெளியில் தலை காட்டவே அச்சப்படுகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மக்கள் இளநீர், ஜீஸ், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென மழை பெய்தது. குறிப்பாக, கீழப்பழுவூர், வி.கைக்காட்டி, பொய்யூர், வாரணவாசி, செந்துறை, திருமானூர் உள்ளிட்ட பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
