கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் சண்முகம் நேற்று அளித்த பேட்டி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணி குறித்து முன் வைத்து வரும் விமர்சனங்கள் அனைத்தும் வெறும் அவதூறுகளே. ஒரு முன்னாள் முதலமைச்சருக்குரிய அரசியல் முதிர்ச்சி அவரிடம் துளியும் இல்லை. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க தைரியம் இல்லாததால் தான், அவர் திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது தரம் தாழ்ந்த தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்.
இத்தகைய பிரசாரங்களை இடதுசாரி கட்சிகள் ஒருபோதும் ஏற்காது. எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்று பதவி வாங்கியது உலகம் அறிந்த உண்மை. அதை மறைத்துவிட்டு, இப்போது ‘புலனாய்வு புலி’ போலப் பேசுவது மக்கள் மத்தியில் எடுபடாது. பாஜவின் கைப்பாவையாக செயல்பட்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்த அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் இரட்டை வேடம் போடுவதை மக்கள் அறிவார்கள்.
கந்தன் முருகன் வாக்கு என்ற பெயரில், பாஜ வெளியிடும் செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோக்கள் தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறுகின்றன. இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுக – பாஜ கூட்டணியை வீழ்த்துவதே எங்களின் முதன்மையான நோக்கம்.
தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ள ‘ஒரு பவுன் மோதிரம் மாமன் சீர்’ போன்ற திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லாதவை. இன்றைய நிலையில் ஒரு பவுன் தங்கம் ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் விற்பனை ஆகிறது. தமிழகத்தின் மொத்த பட்ஜெட்டை கொண்டு வந்தாலும் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது. இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மக்களை ஏமாற்ற கூடாது. இதுபோன்ற பொய் வாக்குறுதிகளை இடதுசாரிகள் ஏற்க மாட்டார்கள், என்றார்.
