தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சத்தியமங்கலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத்தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவிற்கு சாதகமாக அதிமுகவிலேயே இருந்திருக்க வேண்டும். அவர் பாஜ மாநில தலைமையை ஏற்றதால் 11 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.
அதிமுகவில் எல்லோரும் பணம் கட்டுங்கள் வாய்ப்பு தருகிறோம் என்று சொன்னார்கள் தற்போது எல்லோருக்கும் திருப்பதி நாமம் கையில் கொடுத்து விட்டார்கள். அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள ஏ.கே.செல்வராஜ் என்னை தோற்கடிப்பேன் நடுத்தெருவில் நிறுத்துவேன் என்று சொன்னார். இப்போது கட்சி தலைமை அவருக்கு சீட்டு வழங்காமல் அவரை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
