புதுச்சேரியில் விஜய் இன்று பிரசாரம்; வெயிலால் மயங்கி விழுந்த இளம்பெண்: வழக்கம்போலவே தவெகவினர் அத்துமீறல்

புதுச்சேரி: புதுவையில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் விஜய் பிரசாரம் இன்று நடந்தது. அப்போது வெயிலில் நீண்ட நேரம் காத்துக் கிடந்த இளம்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கம்போலவே இந்தக் கூட்டத்திலும் தவெகவினர் போலீஸ் நிபந்தனைகளை மீறியும் அத்துமீறியும் நடந்து கொண்டனர். புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9ம்தேதி நடக்கிறது. இதில் ேதர்தலில் தவெக சார்பில் 28 பேரும், அதன் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் சார்பில் 2 பேரும் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் இன்று காலை தட்டாஞ்சாவடி மார்க்கெட்டிங் கமிட்டி, கடலூர் சாலை வெங்கட சுப்பா ரெட்டியார் சதுக்கம், தவளக்குப்பம் சந்திப்பு என 3 இடங்களில் நடந்தது.

இந்த பிரசாரத்துக்கு அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து விஜய் ரசிகர்கள் அதிக அளவில் கூடாமல் இருக்க வேண்டும், கர்ப்பிணிகள், பெண்கள், குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. வாட்டர் பாட்டில், பிஸ்கெட் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி செய்து இருக்க வேண்டும் உள்ளிட்ட 11 நிபந்தனைகளை காவல்துறை விதித்தது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு கொக்கு பார்க் சிக்னல் அருகே உள்ள தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியில் சாய் ெஜ.சரவணன்குமார் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் உள்ளிட்ட தவெக வேட்பாளர்களை ஆதரித்து வேனில் நின்றபடி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தையொட்டி, அங்கு தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

அப்போது, காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறி தவெகவினர் ஏராளமான பெண்களை அவர்களது குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் அழைத்து வந்தனர். மேலும், கொக்கு பார்க் சிக்னல் அருகே சாலையோரம் உள்ள சிமெண்ட் சிலாப் மேல் ஆபத்தை உணராமல் பெண்கள் மற்றும் தொண்டர்கள் ஏறி நின்றிருந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார், ஒவ்வொருவராக எச்சரித்து மாற்று பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பிரசார கூட்டத்தில் இளம்பெண் ஒருவர் நீண்டநேரம் வெயிலில் நின்றிருந்தார். இதனால் அவர் திடீரென விஜய் பிரசாரம் நடந்த மைதானத்தில் மயங்கி விழுந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பவுன்சர்கள், தவெகவினர் அவரை ஆம்புலன்சிஸ் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், ராஜீவ்காந்தி சதுக்கத்தில் இருந்து கொக்கு பார்க் சிக்னல் வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் இசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வழக்கமாக விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.

Related Stories: