×

மக்களின் கடும் எதிர்ப்பால் ஏற்றிய வேகத்திலேயே பெட்ரோல் விலையை குறைத்த பாகிஸ்தான் அரசு.!

மக்கள் இதுவரை இல்லாத அளவு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில் அண்டை நாடான பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்ட ஒரே நாளில், பெட்ரோல் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகளாவிய எண்ணெய் விலையேற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் குடிமக்கள் மீதான நிதிச்சுமையைக் குறைக்கும் முயற்சியாக, ஒரு லிட்டருக்கு PKR 80 வீதம் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.26.63) பெட்ரோல் விலையை அதிரடியாக குறைப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய போது, பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 80 பாகிஸ்தான் ரூபாய் (PKR 80) குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் பெட்ரோல் இறுதியாக நுகர்வோருக்கு லிட்டருக்கு 378 என்ற பாகிஸ்தான் ரூபாய் வீதத்தில் கிடைக்கும் என்றும், நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் திருத்தப்பட்ட விலையில் பெட்ரோல் கிடைக்கும் என்றும் ஷெரீஃப் அறிவித்தார்.

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் தான் சமீபத்தில் பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மற்றும் ஹை-ஸ்பீட் டீசல் (HSD) ஆகியவற்றின் விலைகள் முறையே 43% மற்றும் 55% என்ற முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்த்தி அரசு அறிவிப்பை வெளியிட்டது.

பெட்ரோல் விலை குறைந்தது ஒரு மாதத்திற்கு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் திருத்தப்பட்ட விலையில் மாற்றமின்றித் தொடரும் என்றும், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலே பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் கூறினார். எனினும் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும், ரயில் சேவைகளைச் சார்ந்திருக்கும் பயணிகளுக்குப் பயணச் செலவு தொடர்ந்து கட்டுப்படியாகும் வகையில் இருப்பதை உறுதி செய்ய சாதாரண வகுப்பு ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அரசு தற்போது சமீபத்தில் அதிகரித்த பெட்ரோலின் விலையை மட்டுமே குறைத்துள்ளது; ஆனால் டீசலின் விலையை குறைக்கவில்லை. ஏப்ரல் 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட திடீர் விலை உயர்வினால், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை பாகிஸ்தானில் சுமார் PKR 458 வரை எட்டியிருந்த நிலையில், தற்போது இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிராக எழுந்த கடும் எதிர்ப்புகளையும் நாடு தழுவிய போராட்டங்களையும் தொடர்ந்து, பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் முதன்மை நோக்கத்துடன் பாகிஸ்தான் அரசாங்கம் பெட்ரோல் விலையை குறைத்திருக்கிறது.

Tags : Pakistani government ,Pakistan ,
× RELATED ‘கிரீன் சான்வி’ கப்பல் பாதுகாப்பாக...