பஞ்சாப் அணி வெற்றி

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐபிஎல் 19வது தொடரின் 7வது போட்டி சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் திடலில் நேற்று நடந்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீசியது. அதையடுத்து, சென்னை அணியின் துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.

முதல் போட்டியில் சொதப்பிய சஞ்சு சாம்சன், நேற்றைய போட்டியிலும் மோசமாக ஆடி 7 ரன்னில், சேவியர் பார்ட்லெட் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் ருதுராஜ் உடன் இணை சேர்ந்த இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அதனால், 29 பந்துகளில் ஆயுஷ், 4 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் எட்டினார். தொடர்ந்து சிறப்பாக ஆடி அதிரடி காட்டிய இந்த இணையால் சென்னை அணியின் ஸ்கோர், 9.5 ஓவர்களில் 100ஐ எட்டியது.

இவர்கள் 2வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் விளாசிய நிலையில், 12வது ஓவரை வீசிய யுஸ்வேந்திர சஹல், ருதுராஜ் (22 பந்து, 28 ரன்) விக்கெட்டை பறித்தார். அதன் பின், சிவம் தூபே வந்த நிலையில், அடுத்த ஓவரில் ஆயுஷ் மாத்ரே (43 பந்து, 5 சிக்சர், 6 பவுண்டரி, 73 ரன்) அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து வந்த கார்த்திக் சர்மா 1 ரன்னில் வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் சர்பராஸ் கான் 12 பந்தில் 32 ரன் விளாசி அவுட்டானார். 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் சிவம் தூபே 45 (27 பந்து), பிரசாந்த் வீர் 6 ரன்னுடன் களத்தில் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் விஜயகுமார் வைஷாக் 2, சேவியர் பார்ட்லெட், சஹல், மார்கோ யான்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
2வது இன்னிங்சை துவங்கிய பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 210 ரன் இலக்கை 5 விக்கெட்டை இழந்து எட்டியது. இதனால் பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாபில் ஷ்ரேயாஸ் 50 ரன், பிரப்சிம்ரன் சிங் 43 ரன் எடுத்தனர். சென்னை பந்து வீச்சில் மேட் ஹெண்ட்ரி, அன்ஷுல் தலா 2 விக்கெட் எடுத்தனர். சென்னை அணி தொடர்ச்சியாக 2வது போட்டியிலும் தோல்வியை தழுவியிருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: