டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் கெடு: 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ்

புதுடெல்லி: திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்றவர் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார். இவர்,”தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தூண்டுதலின் பேரில் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலை தளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக சீமான் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். இதையடுத்து சீமான் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,” தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,” சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக டி.ஐ.ஜி வருண்குமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் சீமான் அடுத்த நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

Related Stories: