வெப்பம் உயரவும் வாய்ப்பு கரூர், வேலூரில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது

சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக கரூர், வேலூர் மாவட்டங்களில் நேற்று 103 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து, 7ம் தேதி வரையில் படிப்படியாக வெப்பம் உயரவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை நேற்று பெய்துள்ளது.

அதிகபட்சமாக தேனி மாவட்டத்தில் 90மிமீ மழை பெய்துள்ளது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்பட்டது. வெப்பநிலையில் பொதுவாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை என்றாலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்தும், பிற இடங்களில் இயல்பை ஒட்டியும் இருந்தது. இந்நிலையில், வளி மண்டலத்தில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் மரத்வாடா முதல் தென் தமிழகம் வரையில் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை(Trough) நிலவுகிறது.

அதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நேற்று பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இதேநிலை 9ம் தேதி வரையும் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, 7ம் தேதி வரையில் வட தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் படிப்படியாக உயரவும் வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி வரை இருக்கும்.

Related Stories: