பாஜ ஆளும் மாநிலங்களை காட்டிலும் திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் எல்லாவற்றிலும் முதலிடம்

* 10 புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பல நகரங்களில் புதிய நியோ டைடல் பூங்காக்கள், ஐ.டி. – ஏற்றுமதியில் வளர்ச்சி, ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கையில் தகவல்

சென்னை: பாஜ ஆளும் மாநிலங்களை காட்டிலும் திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் எல்லாவற்றிலும் முதலிடம் வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2021ம் ஆண்டு திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் இளைஞர்கள், மகளிர் ஆகியோரின் வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்கும் நோக்கிலும் பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார். அவை பின்வருமாறு:

* தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழில் முகவர் மாநாடுகள்
தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி தொழில் தொடங்கிட ஊக்கமளிக்க தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரை, கிருஷ்ணகிரி முதலிய பல்வேறு இடங்களில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தினார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகள், ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் முதலிய நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி, புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு தேவையான நில வசதிகள் உள்பட அனைத்தையும் திராவிட மாடல் அரசு வழங்கும்; அத்துடன், அறிவும் ஆற்றலும் நிறைந்த கல்வி, தொழில்நுட்பத்தில் சிறந்த மனிதவளமும் தமிழ்நாட்டில் நிறைய உள்ளன என்பதை எடுத்துக் கூறி தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இவற்றின் பயனாக, கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளின் தொழில் முகவர்களுடன் 1176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 12.16 லட்சம் கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளுடன் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன. இவற்றின் மூலம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டில் முதற்கட்டமாக 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் 3,500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வின்பாஸ்ட் மின் வாகன தொழில்சாலை, ரூ.1003 கோடியில் பிள்ளைப்பாக்கம் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழில்சாலை, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில்,

ரூ.1,000 கோடி முதலீட்டில், 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் நிறுவனத்தின் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலை, ரூ. 3250 கோடியில் மீண்டும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள போர்டு தொழிற்சாலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 36 லட்சம் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

* புதிய தொழிற்கொள்கைகளும், நில வங்கியும்:
தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை 2021, தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் கொள்கை 2024 முதலிய 19 புதிய தொழிற்கொள்கைகள் வகுக்கப்பட்டு: தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் கவனம் செலுத்தி 45,000 ஏக்கர் நில வங்கி உருவாக்கப்படும் என அறிவித்து; அந்த இலக்கை விஞ்சிடும் வகையில் சிப்காட் நிறுவனம் 54,015 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு புதிய தொழில்களுக்கு நிலங்களை வழங்கியுள்ளது.

* 5 ஆண்டுகளில் 30 புதிய சிப்காட் தொழில் வளாகங்கள் :
முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ல் ஆட்சிப்பொறுப்பேற்ற பின் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் 12,198 ஏக்கர் பரப்பளவில் 30 புதிய சிப்காட் தொழில் வளாகங்களை உருவாக்கியுள்ளார்.

* புதிய டைடல் பூங்காக்கள்
தமிழ்நாட்டில் தொழில் வளம் பெருக்குவதில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுக்க முடியும் எனும் உயரிய நோக்கத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் புதிய டைடல் பூங்காக்களை உருவாக்கி வருகிறது. பட்டாபிராம் டைடல் பூங்கா தரைத்தளம் மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரஅடி கட்டுமான பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. மதுரை டைடல் பூங்கா 5.34 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 13 தளங்களுடன் கட்டப்படுகிறது. திருச்சி டைடல் பூங்கா 5.58 லட்ச சதுரஅடி கட்டுமானப் பரப்பளவில் 7 தளங்களுடன் அமைக்கப்படுகிறது.

* திராவிட மாடல் அரசின் புதிய நியோ டைடல் பூங்காக்கள் :
தகவல் தொழில்நுட்பத் தொழில் வாய்ப்புகளைப் பரவலாக அமைத்திட வேண்டும் என்னும் சீரிய நோக்கத்துடன் நியோ டைடல் பூங்காக்களை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. இதன்படி சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் புதிய நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. அத்துடன், திருப்பூர், காரைக்குடி, ராசிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் நியோ டைடல் பூங்காக்கள் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகின்றன.

* 10 புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்கள்:
10 புதிய தொழில் தொடங்குவதற்காக முன் வரும் தொழில் முகவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வரும் திராவிட மாடல் அரசு வரிச்சலுகை முதலியவற்றை வழங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில்களை ஊக்கப்படுத்திடும் சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் தமிழ்நாடு நிறுவியுள்ளது.

* பாஜ ஆளும் மாநிலங்களுடன் ஒப்பீடு – தமிழ்நாடு முதலிடம்:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைவதற்கு முன் தமிழ்நாட்டில் 48 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மட்டுமே இருந்தன. 2021-க்கு பின் 10 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, தற்பொழுது மொத்தம் 58 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழில்களை புதிதாக தொடங்குவதற்கும், உற்பத்தி பொருட்களை ஏற்றுமதிகள் செய்வதற்கும் வரி சலுகைகள் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு

இவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வெளிநாடுகளுக்கு, ஏற்றுமதி செய்வதில் தமிழ்நாடு இந்தியாவில் முதல் இடம் பெற்றுள்ளது. இதே நேரத்தில் பாஜ ஆட்சி செய்கின்ற குஜராத் மாநிலத்தில் 2020ல் செயல்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எண்ணிக்கை 20 மட்டுமே தற்போது 27 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அங்கு உள்ளன. அதே போல மகாராஷ்டிர மாநிலத்தில் 2020ல் 37 சிறப்பு பொருளாதார மண்டலங்களும் தற்போது 41 சிறப்பு பொருளாதார மண்டலங்களும் உள்ளன.

உத்தரபிரதேச மாநிலத்தில் 2020ல் 14 சிறப்பு பொருளாதார மண்டலங்களும், தற்போது 23 சிறப்பு பொருளாதார மண்டலங்களும் உள்ளன. மத்திய பிரதேசத்தில் 2020ல் 5 சிறப்பு பொருளாதார மண்டலங்களும், தற்போது 8 சிறப்பு பொருளாதார மண்டலங்களும் அமைந்துள்ளன. ஏறத்தாழ இதே நிலை தான் ஏனைய மாநிலங்களிலும் உள்ளன.

இவை எல்லாவற்றையும் விட, தமிழ்நாடு மிக அதிக எண்ணிக்கையில் 2020ல் 48 சிறப்பு பொருளாதார மண்டலங்களை கொண்டிருந்தது, முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட சிறப்பு முயற்சிகளால் 5 ஆண்டுகளில் 10 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் புதிதாக அமைக்கப்பட்டு மொத்தம் 58 சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் கொண்டு தமிழ்நாடு இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாகவே திகழ்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 7 புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்காவும் அமைக்கப்பட உள்ளன. மைக்ரான், ரிலையன்ஸ், இன்போசிஸ் மற்றும் எல் அண்ட் டி போன்ற நிறுவனங்களும் புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.

* வரிச் சலுகை மற்றும் சீர்திருத்தம்:
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பேரவையில் வழங்கிய 2026-27 நிதிநிலை அறிக்கையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான வரிகளைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தற்போதுள்ள உபரித் திறனை உள்நாட்டுச் சந்தைக்குப் பயன்படுத்தி, இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கும் அரசு ஊக்கம் அளித்திட திட்டமிட்டுள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கி, ஏற்றுமதி மூலம் மேலும் மேலும் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பதிலும் முதல்வரின் ஆட்சியின் தமிழ்நாடே உறுதி பூண்டுள்ளது பெருமைக்குரியதாகும். இப்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் முனைப்பான கவனம் செலுத்தி தொடர்ந்து பல தொழிற்சாலைகளை பல்வேறு அமைப்புகள் மூலம் நிறுவி வருவதால் தமிழ்நாடு பல முனைகளிலும் முன்னேற்றம் கண்டுவருகிறது.

ஒன்றிய அரசின் அரசின் அறிவிப்பின்படி பொருளாதார வளர்ச்சியில் 11.19 இரண்டு இலக்க வளர்ச்சி கண்டு இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதலிடம் என்னும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இது முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஓய்வில்லா உழைப்பிற்குக் கிடைத்த மகத்தான வெற்றியென்றே அனைவரும் பாராட்டுவது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: