தொடர் இழுபறிக்கு மத்தியில் பாஜ போட்டியிடும் 27 தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அண்ணாமலைக்கு சீட் இல்லை ஆதரவாளர்களும் அடியோடு புறக்கணிப்பு

சென்னை: தொடர் இழுபறிக்கு மத்தியில் பாஜ போட்டியிடும் 27 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நயினார் நாகேந்திரன்- சாத்தூர், மயிலாப்பூர்-தமிழிசை சவுந்தரராஜன், அவினாசி- எல்.முருகன், கோவை வடக்கு- வானதி சீனிவாசன் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. அவரது ஆதரவாளர்களும் அடியோடு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்றும், நாளை மறுநாள் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ அங்கம் வகிக்கிறது. இந்த கூட்டணியில் பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் சாத்தூரில் மட்டும் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட போகிறார் என்பது இறுதியானது. மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவார் என்பது உறுதியாகியிருந்தது.

ஏனென்றால் எடப்பாடி பிரசாரத்தின் போது கூட அவருடன் தமிழிசை தான் வாக்குகளை சேகரித்தார். சென்னையில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதால், சென்னையில் மற்ற தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களும் மயிலாப்பூர் தொகுதியை எதிர்பார்த்து காத்து இருந்தனர். இதனால், மயிலாப்பூருக்கு திடீரென கடும் போட்டி உருவானது. அதே நேரத்தில் இந்த தேர்தலில் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட தயாராக இருந்தார். ஆனால் இந்த தொகுதிகள் எதுவும் பாஜவுக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அண்ணாமலை ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது பாமக, அமமுக கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிய பின்னரே, பாஜவுக்கான தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது. பாஜவுக்கு சாதகமில்லாத தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் மேலிடத்திடம் இதுதொடர்பாக தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தார். அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டால் கூட்டணியில் திடீர் சலசலப்பு உருவானது. அதே நேரத்தில் பாஜவுக்கு சாதகமான தொகுதிகள் வழங்கப்படாததை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது.

இதனிடையே கட்சி மேலிடம் அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தியது. ஆனால், போட்டியிட்டால் கோவை மாவட்டத்தில் போட்டியிடுவேன் என்று அண்ணாமலை அடம் பிடித்ததாக கூறப்படுகிறது. தான் விரும்பிய தொகுதி கிடைக்காததால் அண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஒரு தகவல் வெளியானது. அதே நேரத்தில் தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழகம் வந்து பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார்.

அவர் தலைமையில் நடந்த மையக்குழு கூட்டத்தில் ஒரு தொகுதிக்கு 3 பேர் என வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த பட்டியல் பாஜ தலைமைக்கு அனுப்பப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் பாஜ வேட்பாளர்கள் பட்டியலை எந்த நேரத்திலும் கட்சி தலைமை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படாமல் இருந்து வந்ததால், சென்னையில் பிரதமர் மோடியின் பிரசாரம், ரோடு ஷோ கூட ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை நேற்று மாலை பாஜ மேலிடம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த பட்டியலில் முக்கியமான தலைவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவினாசி (தனி) தொகுதியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தமிழக பாஜ முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனும் போட்டியிடுகின்றனர்.

இது தொடர்பாக பாஜ தேசிய செயலாளர் அருண்சிங் வெளியிட்ட அறிவிப்பு: ஆவடி-எம்.ராஜசிம்ம மஹிந்திரா என்ற அஸ்வின் குமார், மயிலாப்பூர் – தமிழிசை சவுந்தரராஜன், தளி – டாக்டர் நாகேஷ் குமார், திருவண்ணாமலை- சி.ஏழுமலை, ராசிபுரம் (தனி)- பிரேம்குமார், மொடக்குறிச்சி-கிருத்திகா சிவகுமார் போட்டியிடுகின்றனர். உதகமண்டலம்-போஜராஜன், அவினாசி (தனி)- எல்.முருகன், திருப்பூர் தெற்கு – தங்கராஜ்,

கோவை வடக்கு – வானதி சீனிவாசன், திருவாரூர் – கோவி.சந்துரு, தஞ்சாவூர்-எம்.முருகானந்தம், கந்தர்வக்கோட்டை (தனி) – சி.உதயகுமார், புதுக்கோட்டை- என். ராமச்சந்திரன், அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த், திருப்பத்தூர்- கே.சி.திருமாறன், மானாமதுரை (தனி)- பொன்.வி.பால கணபதி, மதுரை தெற்கு- பேராசிரியர் ராம சீனிவாசன், சாத்தூர்- நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ராமநாதபுரம்- ஜி.பி.எஸ்.நாகேந்திரன், திருச்செந்தூர் – கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் (தனி)- ஆனந்தன் ஐயாசாமி, ராதாபுரம் – பாலகிருஷ்ணன், நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி, குளச்சல் – சிவக்குமார், பத்மநாபபுரம் – பி.ரமேஷ், விளவங்கோடு – விஜயதரணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை போட்டியிடும் தொகுதி தான் இழுபறியாக இருந்து வந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை. அவருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அண்ணாமலை ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் அண்ணாமலை ஆதவாளரான பாஜ மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு இருந்தார். அவருக்கும் சீட் வழங்கப்படவில்லை.

இதேபோல அண்ணாமலை ஆதரவாளர்களான மாநில செயலாளர் அஸ்வத்தாமன் திருவண்ணாமலையிலும், அமர்பிரசாத் ரெட்டி தளி தொகுதியிலும், புரட்சி கவிதாசன் கந்தர்வக்கோட்டையிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டனர். அவர்களுக்கும் சீட் வழங்கப்படவில்லை. முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்.

அவருக்கும் சீட் வழங்கப்படவில்லை. பாஜ மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமியின் மகன் பிரேம்குமார், ராசிபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், முருகனின் தீவிர ஆதரவாளர். திருப்பூர் தெற்கில் இந்து முன்னணி தலைவர் கடேஸ்வர சுப்பிரமணியம் மகன் தங்கராஜூக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

* இளம் வேட்பாளரை எதிர்த்து களம் காணும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்
திருப்பூர் மாவட்டம் அவினாசி (தனி) தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் கோகிலாமணி போட்டியிடுகிறார். அவருக்கு வயது 26. அவர் இளம் வேட்பாளராக பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் அந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்த தொகுதியில் யாருக்கு வெற்றி கிடைக்க போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவினாசி தொகுதியை பொறுத்தவரை 1984 முதல் 2021 வரையிலான 9 தேர்தல்களில் அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தொகுதியை அதிமுக எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை. முதல் முறையாக இந்த தொகுதியை பாஜவுக்கு அதிமுக விட்டுக்கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* 3 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் 3 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. அதாவது கடந்த முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கோவை தெற்கில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசன், இந்த முறை கோவை வடக்கில் போட்டியிடுகிறார்.

நாகர்கோவில் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற எம்.ஆர்.காந்திக்கு மீண்டும் அதே தொகுதி வழங்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட டாக்டர் சி.சரஸ்வதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அவரது மருமகள் கிருத்திகா சிவகுமார் அந்த தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பாஜவில் 5 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த விஜயதரணிக்கு வாய்ப்பு
காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்.விஜயதரணி விளவங்கோடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜவில் சேர்ந்த அவருக்கு பதவிகள் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் விஜயதரணி கடும் ஏமாற்றத்திலேயே இருந்து வந்தார்.

அண்மையில் தமிழக பாஜவிற்கு முக்கிய பொறுப்பாளர்கள் நியமனத்தின் போதும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஏற்கனவே, அவர் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்த விளவங்கோடு தொகுதியை பாஜ ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு பியூஸ் கோயல் பேட்டி
பாஜ வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. இதுகுறித்து ஒன்றிய அமைச்சரும், பாஜ மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் அளித்த பேட்டி: பாஜ வேட்பாளர்கள் பட்டியலில் இம்முறை அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர்களும் நிச்சயம் வெற்றி பெறுவர்.

அமைய உள்ள எடப்பாடி பழனிசாமியின் அரசு அனைவருக்குமான அரசாக இருக்கும். அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க தேர்தல் பணியாற்ற விரும்புகிறார். கட்சியினரின் உணர்வு, வேட்பாளரின் விருப்பத்தின் பேரிலேயே வாய்ப்பு தரப்படுகிறது. அர்ப்பணிப்புடன் கூடிய செயல்வீரரான அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: