ஐதராபாத்: ஐதராபாத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவன் கொடுத்த டார்ச்சரால் சாப்ட்வேர் இன்ஜினியர் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த இஷிதா யாதவ் (26) – மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நீரஜ் பன்சால் (30) ஆகிய இருவரும் கடந்த 2020ம் ஆண்டு சமூக வலைதளம் மூலம் அறிமுகமானார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், இருவீட்டு பெரியவர்கள் முன்னிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி பாட்னாவில் திருமணம் செய்து கொண்டனர்.
சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணியாற்றி வந்த இந்த தம்பதியினர், திருமணத்திற்குப் பிறகு ஐதராபாத் சைபராபாத் பகுதியில் வசித்து வந்தனர். திருமணமான சில நாட்களிலேயே இஷிதாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு நீரஜ் பன்சால் பிரச்னை செய்யத் தொடங்கினார். மேலும், தான் புதிதாகத் தொடங்கியுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு இஷிதாவின் பெற்றோரையும் வற்புறுத்தி சித்ரவதை செய்துள்ளார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இஷிதா யாதவ் ஹாலில் உள்ள சீலிங் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த நீரஜ் பன்சால் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த மியாப்பூர் போலீசார், இஷிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில், ‘கூடுதல் வரதட்சணை கேட்டும், தொழிலில் முதலீடு செய்யச் சொல்லியும் என் மகளை நீரஜ் பன்சால் தொடர்ந்து கொடுமைப்படுத்தினார்.
அந்த மன உளைச்சலால்தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்’ என்று தெரிவித்தனர். தொடர்ந்து, வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக முயன்ற கணவர் நீரஜ் பன்சாலை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
