×

‘‘விஜய் வந்தால் அலப்பறை, இல்லை என்றால் அமைதியா?’’- பெரம்பூரில் மூடிக்கிடக்கும் தவெக தேர்தல் தலைமை அலுவலகம்

 

பெரம்பூர்: ‘‘விஜய் வந்த அலப்பறை, இல்லை என்றால் அமைதியா?’’ என்ற நிலையில் பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்க்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட தேர்தல் தலைமை அலுவலகம் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலை சந்திக்கிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள், என கூறப்படுகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நாள் முதலே அவரது ரசிகர்களை கட்டுக்குள் வைக்க முடியாமல் திணறி வருகிறார். வாகனத்தின் மீது விழுவது, பிரசார வாகனத்தை பிந்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்று விபத்தில் சிக்குவது, ஆபத்தை உணராமல் சுவர் மற்றும் மின்சார டிரான்ஸ்பார்ம் மீது ஏறி நிற்பது என் பல்வேறு அட்ராசிட்டிகள் நடந்தன.

கரூரில் 41 பேர் பலியான பிறகும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குறிப்பாக, கொளத்தூரில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதனால் தனது பிரசாரத்தை பாதியிலேயே ரத்து செய்து விஜய் ஓட்டம் பிடித்தார். விஜய் வந்தால் நிலைமை இப்படி இருக்க அவர் போட்டியிடும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அவர் இல்லாத போது நிலைமை எப்படி உள்ளது என்பதை பார்த்தால் சற்று பரிதாபமாகத்தான் உள்ளது.

எம்கேபி நகர் ஜவகர் தெருவில் நடிகர் விஜய்க்காக பிரத்யோகமாக குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்ட தலைமை தேர்தல் அலுவலகம் பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதி தலைமை தேர்தல் அலுவலகம் பூட்டி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, வேட்புமனு தாக்கல் செய்ய விஜய் வந்தபோது இந்த அலுவலகத்தையும் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தலைமை தேர்தல் அலுவலகத்தை திறக்காமல் சென்றுவிட்டதாக வருத்தம் தெரிவித்தனர். மேலும், என்ன செய்வது என்று தெரியாமல் தேர்தல் பணிகளை சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் அலுவலகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

தலைவர் விஜய் நேரடியாக பெரம்பூர் அலுவலகத்திற்கு வந்து தேர்தல் பணிகளை கவனிப்பார் என்பதாலேயே மிக மிக பிரமாண்டமான முறையில் உட்கட்டமைப்புகளோடு கட்டப்பட்ட தேர்தல் பணிமனை தற்போது பூட்டிய நிலையில் காணப்படுகிறது. தேர்தலின்போது நாங்கள் வெற்றி பெற்றால் தொகுதிக்கு அதை செய்வோம், இதை செய்வோம் எனக்கூறும் வேட்பாளர்கள் மத்தியில் தொகுதிக்கு ஒருமுறை மட்டுமே வந்து வாக்கு கேட்டுச் சென்றுள்ள விஜய் தற்போது அவரது கட்சி அலுவலகம் கூட செயல்படாமல் பூட்டிக்கிடப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இவர் வெற்றி பெற்றால் எப்படி தொகுதிக்கு வருவார். எங்கு சென்று தொகுதி பிரச்னைகளை முறையிடுவது என பொதுமக்கள் இப்போதே பேசத் தொடங்கியுள்ளனர்.

தலைவரை பார்க்கும் போது ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள், அலப்பறையில் ஈடுபடும் தொண்டர்கள், அவர் இல்லாதபோது அமைதியாக தங்களது சொந்த வேலைகளை பார்க்க சென்று விடுகின்றனர். நடிகர்களை நடிகர்களாக பார்க்க வரும் கூட்டம் வேறு, அரசியல் தலைவர்களை பார்க்க வரும் கூட்டம் வேறு என்பதை தான் இது காட்டுகிறது என சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Tags : Vijay ,Dweka ,Perampur ,Perambur ,Vijayin ,Tamil Nadu Election ,Tamil Nadu Assembly Election 234 ,
× RELATED தேர்தலில் போட்டியிடுவாரா அண்ணாமலை? – பாஜக தலைமை இன்று இறுதி முடிவு