திருச்சி, ஏப். 3: திருச்சியில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிந்தது. இறுதிநாள் நடைபெற்ற சமூக அறிவியல் தேர்வை 33 ஆயிரத்து 484 மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. திருச்சி மாவட்டத்தில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வை எழுதுவதற்கு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 446 பள்ளிகளை சேர்ந்த 33 ஆயிரத்து 940 பேர் விண்ணப்பித்திருந்தனர். 177 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், 10ம்வகுப்பு பொதுத்தேர்வு நேற்று நிறைவடைந்தது.
இறுதிநாள் நடைபெற்ற சமூகஅறிவியல் பாடத் தேர்வை 33 ஆயிரத்து 484 மாணவர்கள் எழுதினர். 456 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. 10ம்வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் எடமலைபட்டிப்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி, முசிறி அமலா மகளிர் உயர்நிலைப்பள்ளி, மணப்பாறை சிறியமலர் உயர்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
