திருச்சி: திருச்சி தென்னூரில் இன்று நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசினார். முன்னதாக காந்தி மார்க்கெட்டில் நடந்து சென்று வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் நேற்று பிரசாரத்தை துவக்கினார். கூட்டம் முடிந்ததும் இரவு காரில் திருச்சிக்கு வந்து கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.
இந்நிலையில் இன்று காலை 6.45 மணிக்கு ஓட்டலில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், காரில் புறப்பட்டு தவெக தலைவர் விஜய் போட்டியிடும், கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு நடந்து சென்று வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் பார்த்த மக்கள், வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உற்சாகமடைந்தனர். அவர்கள், முதல்வருக்கு வணக்கம் தெரிவித்ததுடன், கைகுலுக்கி வரவேற்றனர். இதில் பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அங்குள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து டீக்குடித்தார். நடந்து வந்து ஓட்டு கேட்ட முதல்வரின் இந்த எளிமையான பிரசாரம் வியாபாரிகளை வெகுவாக கவர்ந்தது.
இதையடுத்து பாலக்கரை சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று சாலையின் இருபுறமும் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் அங்கிருந்து காரில் ஏறி ஓட்டலுக்கு புறப்பட்டார். வழியில் பீமநகரில் காரை விட்டு இறங்கி, மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவுக்கு ஆதரவு திரட்டினார். பின்னர் 7.45 மணிக்கு முதல்வர் ஓட்டலுக்கு வந்தார். இதில் மேற்கு வேட்பாளர் கே.என்.நேரு, திருவெறும்பூர் வேட்பாளர் அன்பில் மகேஷ், கிழக்கு வேட்பாளர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டனர்.
ஓட்டலில் முதல்வரை சந்திக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு உள்ளிட்ட நிர்வாகிகள், பூ.விஸ்வநாதன் உள்பட விவசாயிகள், முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்பினர் ஓட்டல் முன் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் ஓட்டலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை முதல்வர் சந்தித்து பேசினார். தொடர்ந்து ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலுக்கு சென்றார். அங்கு நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திருச்சி மேற்கு, கிழக்கு, ரங்கம், திருவெறும்பூர், லால்குடி, முசிறி, மணப்பாறை, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் மீண்டும் தனியார் ஓட்டலுக்கு வந்து ஓய்வெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பிற்பகலில் கார் மூலம் கரூருக்கு புறப்பட்டு செல்கிறார். மாலை 5 மணியளவில் கரூர் ராயனூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். கரூரில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஈரோடு புறப்பட்டு செல்கிறார்.
