ஆறுமுகநேரி, ஏப். 1: காயல்பட்டினம் எல்.கே.தொடக்கப்பள்ளியின் 98வது ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் எல்.கே.லெப்பை தம்பி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தியாகராஜன் வரவேற்றார். குழந்தைகள் நல மருத்துவர் முகம்மது கிஷார், வட்டார கல்வி அலுவலர்கள் பாப்ஹாய்ஸ், மாணிக்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு, கல்வி மற்றும் கலைநிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். இப்பள்ளியில் பயின்று தற்போது சுபைதா மேல்நிலைப்பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி பனிமலருக்கு பள்ளி துணைத் தலைவர் இலியாஸ் பரிசு வழங்கி கவுரவித்தார்.
மேலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை இப்பள்ளியில் கல்வி பயின்று ஒழுக்கத்திலும், படிப்பிலும் சிறந்து விளங்கும் மாணவர் வெனீஸ் குமார், மாணவி கயல்விழி ஆகியோருக்கு தலைமை ஆசிரியரின் சார்பில் தங்க நாணயம் பரிசை தாளாளர் எல்.கே.லெப்பை தம்பி வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியை ஜாபிரா பர்வின் தொகுத்து வழங்கினார். திருச்செந்தூர் வட்டார வளமைய சார்பில் ஆசிரியர் பயிற்றுநர்கள் நபில்புஹாரி மற்றும் ஜெகதீஸ் பெருமாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து மாணவர்களின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
