×

தேர்தலுக்கு முன்பாக ஆயுதங்களை ஒப்படைக்க தவறிய துப்பாக்கி உரிமம் பெற்ற 30 பேருக்கு போலீஸ் நோட்டீஸ்: உடனே ஆயுதத்தை ஒப்படைக்க காவல்துறை எச்சரிக்கை

சென்னை: தேர்தலுக்கு முன்பாக ஆயுதங்களை ஒப்படைக்க தவறியதாக துப்பாக்கி உரிமம் பெற்ற 30 பேருக்கு சென்னை காவல்துறை துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க கோரி நோட்டீஸ் அனுப்புள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நெறிமுறைகளின் படி, சென்னை பெருநகர காவல் எல்லையில் துப்பாக்கி உரிமம் பெற்ற அனைவரும் தங்களது துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சென்னை காவல்துறையில் ஒப்படைக்க கோரி உரிமையாளர்களுக்கு தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி உரிமம் பெற்ற 2,735 பேரில், 500 பேர் விளையாட்டு மற்றும் பாதுகாப்பு சேவைகள் அல்லது பிற பிரத்ேயக காரணங்களுக்காக ஆயுதங்கள் ஒப்படைப்பதில் இருந்து காவல்துறை விலக்கு அளித்திருந்தது. அதை தொடர்ந்து, மீதமுள்ள உரிமையாளர்கள் தங்களது துப்பாக்கிகளை சென்னை பெருநகர காவல்துறையில் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனர். அந்த வகையில் உரிமம் பெற்ற ஆயுத உரிமையாளர்கள் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை காவல்துறை அதிகாரிகளிடம் பெற்று வருகின்றனர். பிறகு தேர்தல் முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட உரிமையாளர் ஆயுதம் கொடுத்ததற்கான ரசீதை மீண்டும் காவல்துறையில் அளித்து அவர்களின் ஆயுதங்களை பெற்று கொள்ளலாம்.

விலக்கு அளிக்கப்பட்ட நபர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் அடைமறிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் ஆயுதங்களின் உரிமையை கோருவதற்காக அசல் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அதிகாரிகள் ஆயுதங்களில் பொறிக்கப்பட்டுள்ள பதிவு எண்களை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரக்குறிப்புகளுடன் ஒப்பிட்டு சரிபார்பார்கள். எனவே ஆயுதச்சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இதுவரை சென்னை பெருநகர காவல் எல்லையில் ஆயுத உரிமம் பெற்ற 30 பேர் தங்களது ஆயுதங்களை காவல்துறையில் முறையாக ஒப்படைக்கப்படவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட 30 பேருக்கு காவல்துறை உடனே ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீசை தொடர்ந்து ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : Chennai ,Chennai Police ,Tamil Nadu Assembly ,Chennai Metropolitan Police… ,
× RELATED கலைஞரின் மண்ணில் கழகத்தின் வெற்றி...