×

புதுயுக்தியை அமல்படுத்திய தேர்தல்துறை; புதுச்சேரியில் பணம் பட்டுவாடாவை சீக்ரெட்டாக கண்காணிக்கும் ட்ரோன்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வருகிற 9ம்தேதி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 தினங்களே இருப்பதால் வேட்பாளர்கள் தொகுதிகளில் பம்பரமாக சுழன்று அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல தேர்தல் ஆணையமும் 78 பறக்கும் படைகள், 33 சோதனைச்சாவடிகளை ஆங்காங்கே அமைத்து நன்னடத்தை விதிமீறல் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

20 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுடன் 20 கம்பெனி மத்திய துணை ராணுவத்தினரும், 28 மத்திய பார்வையாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா வழங்குவது தொடங்கி விட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதை தடுக்கும் வகையில் முதன்முதலாக ட்ரோன் கண்காணிப்பு முறையை இன்று முதல் தேர்தல் துறை அமல்படுத்தி உள்ளது.

வானில் பறப்பதே தெரியாமல் படம்பிடிக்கும் திறன்கொண்ட இந்த ட்ரோன்களில் துல்லியமாக காட்சிகள் பதிவாகும் வகையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் கொண்ட வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் அதிக தூரம் வரையிலும் ஜூம் செய்யும் வசதியும் உள்ளது. சுமார் 800 மீட்டர் தூரம் வரையிலும் பறக்கும் திறன்கொண்ட இந்த ட்ரோன்களால் சத்தம் எதுவும் கேட்காது. 2 கிமீ சுற்றளவில் எது நடந்தாலும் அதை வீடியோவாக பதிவுசெய்யும். இதை தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்ேத பணியாளர்கள் அந்த காட்சிகளை எல்லாம் பார்வையிட்டு கண்காணிக்க முடியும். ட்ரோன் கண்காணிப்பு புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்ட நிலையில், தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறல்கள் இவற்றால் படம்பிடித்து, அதனை ஆதாரமாக வைத்த தேர்தல் துறை வழக்குபதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மேலும் பிரசாரத்தின்போது நடைபெறும் விதிமீறல்கள், வாக்குபதிவு மையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் இந்த ட்ரோன் சீக்ரெட்டாக கண்காணிப்பு உதவும் என தேர்தல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஜி-பே, கூகுள்பே வழியாக நடைபெறும் பணபரிமாற்றங்களும் ரகசியமாக கண்காணிக்கப்படும் என கூறியுள்ளது. தேர்தல் துறையின் இதுபோன்ற அதிரடி நடவடிக்கையால் வேட்பாளர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும், வாக்காளர்களும் கலக்கமடைந்து உள்ளனர்.

Tags : Election Department ,Puducherry ,Puducherry Assembly ,Election Commission ,
× RELATED கலைஞரின் மண்ணில் கழகத்தின் வெற்றி...