சென்னை: உயிருள்ளவரை உஷா படத்தின் பாடல்களின் பதிப்புரிமையை மீறி வர்த்தக ரீதியாக பயன்படுத்த தடை விதிக்கக் கோரி பிரபல இயக்குனர், நடிகர் டி.ராஜேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபல இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் இயக்கி, தயாரித்து, நடித்து, இசையமைத்த படம் உயிருள்ளவரை உஷா. கடந்த 1983ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் மிகவும் பிரபலமானவை. இந்த திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் மறு வெளியீடு செய்யப்பட்டது.
இந்த படத்தின் பாடல்களின் பதிப்புரிமை ஆரம்பத்தில் ஏவி.எம். நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் பல நிறுவனங்களுக்கு அது கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உயிருள்ளவரை உஷா படத்தின் பாடல்களை பதிப்புரிமையை மீறி வர்த்தகரீதியாக பயன்படுத்த ஏவி.எம். மற்றும் டபிள்யூ.எல்.எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு தடை விதிக்கக் கோரி படத்தின் தயாரிப்பாளர்கள் என்ற முறையில் டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா ராஜேந்தர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஏப்ரல் 20ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஏவி.எம். மற்றும் டபிள்யூ.எல்.எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
