×

தேர்தல் விதியில் மாற்றம் செய்யக் கோரி வழக்கு: அவசரமாக விசாரிக்க ஐகோர்ட் கிளையில் முறையீடு

மதுரை: தேர்தல் விதிகளில் மாற்றம் செய்ய கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி மதுரை அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தேர்தலில் வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் விதிகளில் மாற்றம் செய்யவும், மனு நிலுவையில் இருக்கும் வரை சட்டத்தில் தேவையான மாற்றங்களை செய்யவும் உத்தரவிட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோரை திறந்த வெளியில் வெயிலில் நீண்ட நேரம் கூட்டங்களில் பங்கேற்க கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது போன்றவற்றை செய்வதைத் தடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

தேர்தலை காரணம் காண்பித்து கருப்பு பணம் மற்றும் போதைப்பொருளை பயன்படுத்துவது, சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது ஆகியவற்றைத் தடுக்கவும் சிறப்பு கவனம் செலுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, என்.சதிஷ்குமார் அமர்வில் முறையீடு செய்தார். அதற்கு நீதிபதிகள், தேர்தல் தொடர்பான வழக்குகள் சென்னைக்கு மாற்றப்படும் என்பதால், அங்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்றனர்.

Tags : Court ,Madurai ,K.K. Ramesh ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை...