சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுகவின் தேர்தல் அறிக்கையில், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், `ஆவினில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது திமுக தேர்தல் அறிக்கையில், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இதனால், பால் கொள்முதல் அதிகரிக்கும். கர்நாடகாவை போல், தமிழகத்திலும் பால் கொள்முதல் விலையை அரசு நிதியில் இருந்து தர வேண்டும். அரசு மானியமாக அளிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் 2 முறை ரூ.3 உயர்த்தியும், ஊக்கத்தொகையாக ரூ.2ம் என மொத்தம் ரூ.8 வழங்கி உள்ளது. தற்போது தேர்தல் அறிக்கையில் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,’ என்றார்.
