மும்பை: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று 1,100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழலுக்கு மத்தியில், கடந்த வார இறுதியில் அமெரிக்க சந்தைகளான எஸ் அண்ட் பி 500 மற்றும் நாஸ்டாக் ஆகியவை கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன. இதன் தொடர்ச்சியாக இன்று காலை நிக்கி மற்றும் கோஸ்பி உள்ளிட்ட ஆசிய சந்தைகளும் 5 சதவீதம் வரை சரிந்தன.
உலகளாவிய இந்த பொருளாதார சூழலில், ஈரான் நாட்டின் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 6ம் தேதி வரை நீட்டித்ததால், முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் பீதி நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று இந்திய பங்கு வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 73,114 என்ற நிலையை எட்டியது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 105 முதல் 115 டாலராக உயர்ந்ததால், அதிகப்படியான இறக்குமதியை நம்பியுள்ள இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து சந்தை வல்லுநர்கள் கூறுகையில், ‘’நிஃப்டி 50 குறியீடு 22,500 என்ற முக்கிய நிலைக்குக் கீழே சென்றுள்ளது. இந்த நிலை நீடித்தால் மேலும் சரிவு ஏற்பட்டு 22,000 புள்ளிகளைத் தொட வாய்ப்புள்ளது’ என்று எச்சரித்துள்ளனர். சர்வதேச அளவில் நிலவும் இந்த பதற்றத்தால் இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் டாலருக்கு நிகராக 95 ரூபாய் என்ற வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த மார்ச் மாதம் மட்டும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் 95,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று இந்திய சந்தையிலிருந்து வெளியேறியுள்ளனர். இன்றைய வர்த்தகத்தில் டைட்டன், ட்ரெண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் டாடா ஸ்டீல் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
குறிப்பாக வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த பங்குகள் 1,500 புள்ளிகள் வரை சரிந்து பலத்த அடி வாங்கியுள்ளன. அதே வேளையில் டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற ஐடி துறை பங்குகள் மட்டும் ஓரளவிற்குத் தாக்குப் பிடித்து வருகின்றன.தொடர்ந்து நிலவி வரும் இந்த இக்கட்டான சூழல் குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், ‘கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை இந்தியாவின் பணவீக்கத்தை அதிகரிக்கும் நீண்டகால திட்டம் கொண்ட முதலீடுகளைப் பாதிக்கும். இந்திய பங்குச்சந்தையில் இன்று ஏற்பட்ட சரிவினால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றனர்.
