திருவள்ளூர்: காரை ஓட்டிச் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக வந்த அரசு பஸ் மீது அந்த கார் மோதி தம்பதி பரிதாபமாக இறந்தனர். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, பாலாஜி நகரை சேர்ந்த தம்பதி ரவிச்சந்திரன் (65), கீதா (56). இவர்கள் தங்களது பேத்திகளுடன் திருவள்ளூரில் உள்ள கோயிலுக்கு செல்வதற்காக காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.
செவ்வாப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது காரை ஓட்டிச்சென்ற ரவிச்சந்திரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடி அவ்வழியாக வந்த அரசு பேருந்து மீது மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில் படுகாயம் அடைந்த கீதாவை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் கீதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த பேத்திகள் சிறிய காயங்களுடன் தப்பினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலமேலு தலைமையில் போலீசார் சென்று விசாரித்தனர். பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர். இதுசம்பந்தமாக வழக்குபதிவு செய்துள்ளனர்.
