வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு!

டாக்கா: வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியாவுடன் நிலவி வந்த கசப்பான உறவைச் சீர்செய்யும் முயற்சியில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஐபிஎல் 2026 போட்டிகளை அந்நாட்டில் ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை வங்கதேச அரசு அதிரடியாக நீக்கியுள்ளது.

முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில், அப்போதைய இடைக்கால அரசு இந்தியாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததுடன், டி20 உலகக்கோப்பையைப் புறக்கணித்து ஐபிஎல் ஒளிபரப்பிற்கும் தடை விதித்திருந்தது.

தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஜாகிர் உதீன் ஸ்வப்பன், விளையாட்டையும் அரசியலையும் கலக்க விரும்பவில்லை என்றும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட எந்தத் தொலைக்காட்சியும் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பத் தடையில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இன்று ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, இந்தியா-வங்கதேசம் இடையிலான ‘கிரிக்கெட் ராஜதந்திரத்தின்’ முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுவதோடு, அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: