பூஜையின்போது நாம் கைகளைக் குவிப்பதற்கும், கீழே விழுந்து வணங்குவதற்கும் பொருள் என்ன?

?பூஜையின்போது நாம் கைகளைக் குவிப்பதற்கும், கீழே விழுந்து வணங்குவதற்கும் பொருள் என்ன?
– உமா மகேஸ்வரி, மாம்பலம்

நமது வலது கரம் உணவு உண்ணுதல், எழுதுவது போன்ற நல்ல காரியங்களுக்குப் பயன்படுகிறது. நமது இடது கரமோ மற்ற காரியங்களுக்குப் பயன்படுகிறது. ஆனால் ஆண்டவன் முன்னிலையில் உயர்வு-தாழ்வு இல்லை. எல்லோரும் சமம். அதை உணர்த்தவே, இரண்டு கைகளையும் ஒன்றாகச் சேர்த்து ஆண்டவனைப் பார்த்துக் கும்பிடுகிறோம். கடவுள் எல்லாவற்றையும் தன்னிடம் விட்டுச் சரண் அடைந்து நிற்பவர்களிடம் கருணை காட்டுகிறார். அவர்களுக்கு உதவ மனம் இளகி முன்வருகிறார். ‘என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை. எல்லாம் உன்னுடையவை. உன்னுடைய ஆளுகைக்கு என்னை விட்டுவிட்டேன்!’ என்று உடம்பைத் தரையோடு தரையாகத் கிடத்தி வணங்கி, எல்லாச் செயல்களும் ஒடுங்கி, பணிவின் அடையாளமாக இருக்கும் நிலையில் ஆண்டவன் நம்மை ஏற்றுக் கொண்டு அருள்புரிய முன்வருகிறான். காலை வெயிலில் உடம்பில் சூடு முழுவதுமாக உறைக்கும். நடுப்பகலிலோ தலையில் மட்டுமே வெயில்படும். அப்போது தலைக்கு மட்டும் மறைப்பு இருந்தால் போதும். பண்படாத மனத்துக்குப் பலவிதத்திலும் பாதுகாப்பு தேவை. பண்பட்டு உயர்ந்த உள்ளத்துக்கு ஆண்டவன் அருள்மட்டும் இருந்தால் போதும். இப்படி மனத்தை உயர்த்திக் கொள்வதைக் காட்டும் அடையளமாகவே இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயர்த்திக் குவித்து ஆண்டவனை வணங்குகிறோம்.

?மந்திரங்களைப் புரிந்துகொண்டு சொல்ல முடியாதவர்கள்அதைப் புரியக் கூடிய வகையில் மொழிபெயர்த்துச் சொல்லலாமா? அப்போது அதற்குப் பலன் கிடைக்குமா?
– மீனாட்சி, கும்பகோணம்

மந்திரங்களும், பீஜமந்திரங்களும் அவற்றுக்குரிய தெய்வத்தை நம்மிடம் இழுக்கக்கூடியவை. இவை வெறும் வார்த்தைகளோ, வெறும் ஓலிவடிவமோ அல்ல. இவற்றுக்குப் பின்னால் தனியான சக்தி இருக்கிறது. அதை நாம் உணர வேண்டுமானால், அந்த வார்த்தை வடிவத்தையும்-ஒலி வடிவத்தையும் அப்படியே வைத்துக் கொண்டுதான் சொல்ல வேண்டும். பெரிய மரத்தை உருவாக்கக்கூடிய சக்தி சிறு
விதையில் இருக்கிறது. அதை அப்படியே போட்டால்தான் செடி முளைத்து மரமாகும். அதன் சக்தி இருக்கிறது என்று பொடி செய்து பொட்டலம் கட்டிப் போட்டால் செடி முளைக்குமா? அதேபோல மந்திரங்களை அப்படியே பயன்படுத்தினால் அதற்கு உரிய பலன் கிடைக்கும். அந்த மந்திரத்தைச் சொல்ல இயலாதவர்கள், முதலில் அந்தத் தகுதியைப் பெற சாதனை செய்து முயலவேண்டும். அப்படிப் பக்குவப்படாமல் சும்மா மந்திரத்தைச் சொல்லிப் பயன் இல்லை. விதையை வெறும் மண்ணிலோ, கல்லிலோ போட்டால் முளைக்குமா? மண்ணைக் கொத்தி, உரம்போட்டுப் பக்குவப்படுத்தி நீருற்றினால்தான் அது விதையை ஏற்கத் தயாராகும். அப்புறம் விதையைப் போட்டால்தான் அதற்கு பலன் கிடைக்கும். அதேபோல இந்த மந்திரங்களைச் சரியாக உச்சரிக்கவும், அதற்கேற்றபடி மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும் நாம் சாதனைகளைச் செய்ய ேவண்டும். அப்படிச் சிரமப்பட்டு முயன்றால்தான் பலன் கிடைக்கும். சிரமம் இல்லாத வழியில் மந்திரங்களைச் சொல்லிப் பலன்பெற நினைப்பது, மண்ணைப் பக்குவப்படுத்தால் விதையைப் போட்டு, செடி முளைக்கும் என்று எதிர்பார்ப்பதைப் போல ஆகும்.

Related Stories: