அமிர்தசரஸ்: பாடிபில்டர் மற்றும் நடிகர் மரணம் தொடர்பான வழக்கில் 10 பேர் கொண்ட புதிய மருத்துவ குழுவை அமைத்து பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், பிரபல பாடிபில்டர் மற்றும் நடிகர் வரிந்தர் சிங் குமனுக்கு (41) தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், முறையான மருத்துவ விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில், கவனக்குறைவாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தியதாக எலும்பு சிகிச்சை நிபுணர் மற்றும் மயக்க மருந்து நிபுணர் உள்ளிட்ட 4 சீனியர் டாக்டர்கள் மீது கடந்த 20ம் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த முதற்கட்ட விசாரணை ஒருதலைப்பட்சமாக இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மருத்துவ கவனக்குறைவு தொடர்பான வழக்குகளில் ஐ.எம்.ஏ பிரதிநிதி ஒருவரை குழுவில் சேர்க்க வேண்டும் என்ற மாநில அரசின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் தற்போது பஞ்சாப் அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, இந்த மரணம் குறித்து மறுவிசாரணை நடத்த 10 பேர் கொண்ட புதிய மருத்துவக் குழுவை அரசு அமைத்துள்ளது.
இதில் சண்டிகர் பி.ஜி.ஐ மற்றும் பாட்டியாலா ஜி.எம்.சி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த இதய சிகிச்சை, தடய அறிவியல் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 சீனியர் மருத்துவ நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த புதிய குழுவானது, சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தும். சிகிச்சையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பதையும் இக்குழு தீர்மானிக்கும். இந்த புதிய குழு தனது விசாரணை அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
