×

கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல்

*விவசாயிகள் கவலை

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கும்பபபூ அறுவடை பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நெல்லிற்கு வெளி மார்க்கெட்டில் போதிய விலை இல்லாததால், மாவட்டத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

அங்கு ஈரப்பதம், உள்பட பல்வேறு காரணங்களை கூறி கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செண்பகரான்புதூர் நேரடி நெல்கொள்முதல் நிலையம் முன்பு கொள்முதல் செய்யாமல் வைத்திருந்த நெல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அடித்துச்செல்லப்பட்டது.

இதனால் விவசாயிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் போட்டுவைத்துள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யவேண்டும் என கோரி போராட்டம் நடத்தினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்தனர். இதனால் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ஆனால் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்வதில் இழுபறி இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ நெல் ரூ.16க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஒரு கோட்டை நெல் ரூ.1400தான் விலை கிடைக்கிறது.

கடந்த வருடம் ரூ.2000ம் வரை விலைபோனது. இதனால் ஒரு கோட்டைக்கு ரூ.600 இழப்பு ஏற்பட்டுள்ளது. பலத்த நஷ்டம் அடைந்து வரும் விவசாயிகள் தற்போது குமரியில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை அணுகுகின்றனர்.

ஆனால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் போதிய ஆவணங்களை கொடுத்தும், கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர்.இது குறித்து ஒரு விவசாயி கூறியதாவது: நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு கிலோவிற்கு ரூ.25 கொடுக்கின்றனர். ஆனால் வெளி மார்க்கெட்டில் விற்கும்போது, ரூ.16தான் விலை கிடைக்கிறது.

விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்து, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நேரடியாக விவசாயிகள் கொண்டு செல்லும் நெல்லை நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய சுணக்கம் காட்டி வருகின்றனர்.

சுமார் 6 மாத உழைப்பில் கிடைத்த பலனை, அவர்கள் சர்வசாதாரணமாக அலைகழிக்கும்போது, பணஇழப்புடன் மன இழப்பும் ஏற்பட்டு வருகிறது. வியாபாரிகள் பல விவசாயிகள் பெயரில் அடங்கல்கள் வாங்கிவைத்துகொண்டு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை ஆக்ரமித்து வருவதால், விவசாயிகள் கொண்டு செல்லும் நெல்லின் மீது நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் உள்ள ஊழியர்களுக்கு பார்வை விழுவதில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, விவசாயிகள் கொண்டு செல்லும் நெல்லை ெகாள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

Tags : Nagercoil ,Kumbhapoo ,Kumari ,
× RELATED திருவொற்றியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி...