×

தேர்தல் பறக்கும் படையினர் சோதனை எதிரொலி கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் விற்பனை சரிவு

*விவசாயிகள் கவலை

ஈரோடு : ஈரோடு மாட்டுச்சந்தைக்கு கேரள வியாபாரிகள் வராததால், மாடுகள் வரத்து குறைந்ததோடு, விற்பனையிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தைகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு புதன்கிழமை அடிமாடுகளுக்கான சந்தையும், வியாழக்கிழமை பசுக்கள், எருமை மாடுகள், வளர்ப்பு கன்றுகளுக்கான சந்தையும் நடைபெற்று வருகின்றன.இங்கு கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

ஒரு வெளி மாநில வியாபாரி குறைந்தது 10 மாடுகள் வரை வாங்கி செல்வார். இதன் மூலமாக ரூ.5 முதல் 10 லட்சம் வரை வியாபாரம் நடைபெறும். இவ்வாறு பல வியாபாரிகளால் மாட்டுச்சந்தை நாளான்று கோடி கணக்கில் வர்த்தகம் நடைபெறும்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதியும், கேரளாவில் ஏப்ரல் 9ம் தேதியும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இரு மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து வந்த 10க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடமிருந்து தேர்தல் பறக்கும்படையினர் பணம் பறிமுதல் செய்திருப்பது வெளி மாநில வியாபாரிகளை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது. இதனால் கேரளாவில் இருந்து கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வரும் வியாபாரிகள் எண்ணிக்கை முற்றிலும் தடைப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மாட்டுச்சந்தை நிர்வாகிகள் கூறியதாவது: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை போன்று, கேரளாவில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள் வருவார்கள்.

அவர்கள் குறைந்தபட்சம் 100 முதல் 120 மாடுகளை வாங்கிச்செல்வார்கள். இந்நிலையில், கேரளாவில் தேர்தல் பறக்கும் படையின் தீவிர சோதனையால், அம்மாநில வியாபாரிகள் வருவது முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

அதேபோன்று, உள்மாவட்டங்களிலும் தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடிகளால் குறைந்தளவிலான விவசாயிகளே தங்களது மாடுகளை கொண்டு வந்துள்ளனர். அதாவது, சந்தைக்கு 600 முதல் 750 மாடுகள் வரை கொண்டு வரப்படும்.

ஆனால், நேற்று சந்தைக்கு 500க்கும் குறைவான மாடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், அம்மாடுகளை வாங்குவதற்கே போதிய வியாபாரிகள் வரவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Karungalpalayam Market ,Erode ,Kerala ,Karungalpalayam, Erode ,
× RELATED சிவகாசி அருகே விசுவநத்தத்தில்...